|
முன்னாள் யுத்த வலயம் ஜனநாயகத்துக்காக ஏங்குகிறது
-அமந்தா பெரேரா
“எங்களுக்கு வீடுகள், வேலைகள், மற்றும் போக்குவரத்து என்பனதான் தேவையாக உள்ளன, எங்கள் கைகளில் பணம் இருக்கவேண்டிய தேவை உள்ளது.அதன் பின்புதான் எங்களால் தேர்தல்களைப்பற்றி சிந்திக்க முடியும்”. - சாந்தினி குமார்
ஸ்ரீலங்காவில் 30 வருடமாக நீண்டு நின்ற உள்நாட்டுப்போர் மே 2009ல், ஒரு இரத்தக்களரியான முடிவை எட்டியபின், யுத்த ஓசையிலேயே வளர்ந்து பழக்கமாகிவிட்ட வட மாகாணத்தை நோக்கி ஒரு வியப்பான கிசுகிசுப்பு பரவிவருகிறது, தீவிர மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஒரு சேதி காற்றுவாக்கில் அடிபடுகிறது. அது இன்னமும் முறைப்படி அறிவிக்கப்படாவிட்டாலும், தலைநகர் கொழும்பிலுள்ள அரசியல் வட்டத்தில் செப்டம்பரில் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் இன்றிமையாத ஒரு கேள்வியாக உள்ளது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் மத்தியிலுள்ள அதிகாரத்தை பகிர்ந்து முதன்முதலாக நாட்டின் வடமாகாணசபையை உருவாக்குவதற்கு அனுமதி வழங்குமா அல்லது இல்லையா என்பதுதான். உண்மையில் இந்தக் கேள்வியும் மற்றும் அதைத் தீர்ப்பதற்கான அரசியல்வாதிகளின் இயலாமையுமே, 20 மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்ட இந்த தெற்காசிய நாட்டினை மூன்று நீண்ட தசாப்தங்களாக தீவிலுள்ள இருபகுதியினரான மக்களை, சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் என கூறுபோட்டு தேசிய இறையாண்மைக்கு வெடிவைக்கும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. (மேலும்) 18.06.13
___________________________________________________________________________________________________________
சி.சி.ரி.வி கமராக்கள்: 10,000க்கும் மேற்பட்ட குற்றச்செயல்கள் கண்டுபிடிப்பு
* கொள்ளை, கடத்தல், தாக்குதல், திருட்டுக் குற்றங்கள் புரிந்தோரை வளைத்துப் பிடிக்க உறுதுணை
கொழும்பு நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் கடந்த 15 மாதங்களாக சி.சி.ரி.வி. கமராக்கள் மூலம் 10,000ற்கும் மேற்பட்ட குற்றச் செயல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் குற்றச்செயல்களில் 30 கொள்ளைச் சம்பவங்கள், கடத்தல் சம்பவங்கள் உட்பட பாரிய குற்றங்களும் உள்ளடங்கு வதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சி.சி.ரி.வி கமராக்களின் உபயோகத்தைப் பெற்றிருக்காவிட்டால் பெருமளவிலான பாரிய குற்றச்செயல்களை இதுவரை கண்டுபிடிக்க முடியாது போயிருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றஞ்செய்பவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழேயே இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சி.சி.ரி.வி கமராத் தொகுதிகள் மற்றும் அதனைப் பொருத்திய நடமாடும் பொலிஸ் வாகனங்கள் மூலமே இப்பாரிய செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இக்குற்றங்களில் பெருமளவு மோட்டார் போக்குவரத்து சட்டத்தை மீறியவையாகவே அமைகிறது. கொள்ளை, கடத்தல், தாக்குதல், திருட்டு, சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தல் போன்ற குற்றங்களைப் புரிந்தோரை வளைத்துப் பிடிப்பதற்கு சி.சி.ரி.வி. கமராவின் உபயோகம் பெரும் உறுதுணையாகவிருந்தது. 10,000க்கும் மேற்பட்ட குற்றச்செயல்க ளுடன் சம்பந்தப்பட்ட பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். குற்றச்செயலைப் புரிந்தோருக்கு மேலதிகமாக குற்றச்செயல்க ளுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் தொடர்புபட்டவர்கள் சம்பந்தமாக தகவல்கள் பெறப்பட்டுள்ளன. 8,000ற்கும் மேற்பட்டோர் இவ்வாறு இனங்காணப் பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் மோட்டார் போக்குவரத்துச் சட்டத் தண்டனைப் பண மாக 2 கோடிக்கு மேற்பட்ட தொகையை இந்த சி.சி.ரி.வி கமராக்களின் உதவியுடன் அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
___________________________________________________________________________________________________________
முற்றுகை போராட்டம் அறிவிப்பு : வெலிங்டன் ராணுவ முகாமுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அதற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவ மையத்தைச் சுற்றிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குன்னூர், அரவண்காடு, அப்பர்குன்னூர், பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி போலீஸாருடன் சிறப்பு அதிரடிப்படை, ஆயுதப்படை, ஊர்க்காவல் படையினர், போக்குவரத்து வார்டன் அமைப்பினர் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குன்னூர் துணை காவல் கண்காணிப்பாளர் மாடசாமி தலைமையில் ராணுவ முகாமுக்கு வெளியே பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே போல ராணுவ முகாம் நுழைவு வாயிலில் இருந்து ஆயுதங்களுடன் ராணுவத்தினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனங்களும் சிறப்பு அதிரடிப்படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து அறிவித்துள்ள இந்த போராட்டம் காரணமாக வெலிங்டன் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
___________________________________________________________________________________________________________
மூவின மக்களும் ஒற்றுமையாக செயற்பட்டால் இலங்கையை சிங்கப்பூராக மாற்றியமைக்கலாம் - சங்கரத்ன தேரர்
மூவின மக்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் இலங்கையை சிங்கப்பூராக்கலாம் என கல்முனை ஸ்ரீ சுபத்ராராமய விகாரையின் விகாராதிபதியும், கல்முனை பிரதேச மட்ட சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவருமான வண.ரன்முத்துக்கல சங்கரத்ன தேரர் தெரிவித்தார். கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களின் உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், சிங்கள தலைவர்களுடன், சேர்.பொன்.இராமநாதன், அறிஞர் சித்திலெப்பை போன்றவர்கள் ஒன்று சேர்ந்து போராடியதன் விளைவாகவே இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. அவ்வாறே மூவின மக்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் இலங்கையை சிங்கப்பூராக மாற்றலாம். இந்நாட்டில் முப்பது வருட காலமாக நடைபெற்ற கொடிய யுத்தத்தை இல்லாதொழித்து இலங்கை மக்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ்வதற்கு வழிசமைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். நாம் அனைவரும் இன, மத, மொழி வேறுபாடின்றி இலங்கையர் என்ற குறிக்கோளுடன் வாழ வேண்டும் என்பதே எனது அவாவாகும். சுனாமிக்குப் பின்னரே நான் கல்முனை ஸ்ரீ சுபத்ராராமய மஹா விகாரைக்கு வந்தேன். நான் கல்முனைக்கு வந்த பின்னரே தமிழ்மொழியை நன்றாக கற்றுக் கொண்டேன். கல்முனையில் வாழும் சிங்கள மக்களுக்கு தமிழ் நன்றாகத் தெரியும். அதேவேளை கல்முனையில் வாழும் முஸ்லிம், தமிழ் மக்களில் கணிசமானோருக்கு சிங்கள மொழி அறிவு இல்லாமை பெருங்குறைபாடாகும். இக்குறைபாட்டை நிவர்த்திச் செய்யவும் சகல மக்களுடனும் அன்னியோன்யமாக உறவை வளர்த்துக் கொள்வதும் காலத்தின் தேவையாகும் என்றார்.
___________________________________________________________________________________________________________
நாவிதன்வெளி பிரதேச கணக்காளருக்கு புலிகளிடமிருந்து மிரட்டல்?
நாட்டிலிருந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முற்றாக நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கணக்காளரிற்கு 2013.05.25ஆம் திகதியிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத்தலைப்பில் அம்பாறை மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் ஈழவன் எனக்குறிப்பிடப்பட்டு மிரட்டல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதம் கணக்காளரிற்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தாங்களும் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரான அன்வர்டீன் என்பவரும் சேர்ந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தை முஸ்லிம் பிரதேச செயலகமாக மாற்றுவதற்கும், கூடுதலான முஸ்லிம் ஊழியர்களையும், தலைமை உத்தியோகத்தர்களையும் உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள். இவ்வாறான நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி உங்களுக்கு உரித்தான கடமைகளில் மட்டும் ஈடுபடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக உரிய கணக்காளர் சவளக்கடை பொலிஸில் முறப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
___________________________________________________________________________________________________________
பத்மநாபா: ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னிணி சுவிஸ் கிளையின் தோழர்களின் இதயஅஞ்சலிகள்
பத்மநாபா என்பது அவரது சொந்தப் பெயராயினும் அவரது குடும்பத்தவர்களும் நெருங்கிய உறவினர்களும் அவரை பத்தன் என்றே அழைப்பார்கள். நண்பர்களும் மற்றவர்களும் அவரை நாபா என்று அழைத்தார்கள். 1977க்குப் பின்னாலேயே அவரது அரசியல் தலைமறைவு வாழ்க்கையில் பரவலாக அவரது பெயர் தோழர் ரஞ்சன் என்றே வழங்கிற்று. 1982ஆம் ஆண்டும் 1983ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் அவர் கொழும்பிலுள்ள சிங்கள முற்போக்கு சக்திகள் மத்தியிலும் மலையக இளைஞர்கள் மத்தியிலும் புரட்சிப் பணிகளில் ஈடுபட்டபோது தமது பெயரை சேரன் எனப் பயன்படுத்தி வந்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள் மத்தியில் அவரது பெயர் நீண்ட காலமாக தோழர் எஸ்.ஜி என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. ஸ்தாபனத்தில் அவர் கொண்டிருந்த செயலாளர் நாயகம் (Secretary General) பதவிப் பெயரின் ஆங்கில ஆக்கத்தின் முதலெழுத்துக்களே எஸ்.ஜி. என்ற பெயராகும். இது அவரின் பதவிப் பெயரைக் குறிப்பதாக இருந்த போதிலும் நாளடைவில் தோழர்கள் மத்தியில் எல்லோராலும் அழைக்கப்படும் பெயராகியது. ஸ்தாபனத் தோழர்கள் மட்டுமல்லாது ஸ்தாபனத்தோடு மிக நெருக்கமாக நட்புக் கொண்டு உழைத்தவர்களும், பழகியவர்களும் கூட அவரைத் தோழர் எஸ்.ஜி. என்றே அழைத்தனர். (மேலும்) 19.06.13
___________________________________________________________________________________________________________
புலி சந்தேகநபருக்கு புனர்வாழ்வளிக்க முடியாது: சட்டத்தரணி
பாரதூரமான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய விடுதலைப்புலிகளின் சந்தேகநபருக்கு புனர்வாழ்வளிக்க முடியாது என்று அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார். ஜா-எலவில் வைத்து 1999 ஆம் ஆண்டு படுகொலைச்செய்யப்பட்ட ஜெனரல் லக்கி அல்கம கொலை வழக்கில் ஆஜரான அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணியான அஜாட் நவாவியே நீதிமன்றத்தில் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில், சந்தேநபர்களான நால்வருக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம் 110 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபரான ஆர்.ஏ.அஜித் நொஹான் என்ற கிச்சிமல்லி சார்பில் ஆஜரான சட்;டத்தரணி சந்தேகநபருக்கு தண்டனை வழங்காது அவரை புனர்வாழ்வளிப்புக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். தண்டனையின்றி புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவாராயின் தனது தரப்பை சேர்ந்தவரான அஜித் தனக்கெதிரான குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார். சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை அடுத்தே அரச சிரேஷ்ட சட்டத்தரணி, பாரதூர குற்றமான கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை புனர்வாழ்வுக்கு அனுப்புவது பொருத்தமில்லை என்று நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இந்த வழக்கில் ஆர்.ரவீந்திரன், நாகராஜா ஸ்ரீதரன், ஆஜித் குமாரசிறி ஆகியோர் ஏனைய சந்தேகநபர்களாவர். இந்நிலையில் இந்த கோரிக்கையை பரிசீலிப்பதற்காக நீதிபதி மேற்படி வழக்கை செப்டெம்பர் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
___________________________________________________________________________________________________________
எட்வர்ட் ஸ்நோவ்டன்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு கண்காணிப்பு இரகசியங்களை வெளியுலகத்திற்கு அறியத்தருவதற்கு பின்னாலிருந்த 29 வயதுக்காரன்
-ஹொங்காங்கிலிருந்து கிளென் கிறீன்வால்ட்,ஈவன் மக்அஸ்கில் மற்றும் லௌரா பொய்ற்ராஸ்
அ மெரிக்க அரசியல் வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க இரகசியக் கசிவு ஏற்படுத்துவதற்கு தனிப்பட்ட வகையில் பொறுப்பாக இருந்துள்ளார், 29 வயதான எட்வர்ட் ஸ்நோவ்டன் என்பவர், இவர் முன்னாள் அமெரிக்க குற்றவியல் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ யின் தொழில்நுட்ப உதவியாளரும், பாதுகாப்பு ஒப்பந்தகாரரான பூஸ் அலென் ஹமில்டனில் தற்போது பணியாற்றி வருபவருமாவார். ஸ்நோவ்டன் தேசிய பாதுகாப்பு முகவர் நிறுவனத்தில் கடந்த நான்கு வருடங்களாக பூஸ் அலென் மற்றும் டெல் உட்பட்ட பல்வேறு வெளி ஒப்பந்தகாரர்களின் பணியாளராக கடமையாற்றி வந்துள்ளார். கார்டியன் பத்திரிகை பல நாட்கள் நடத்திய நேர்காணல்களின்பின் அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரது அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. உயர் இரகசியங்களடங்கிய எண்ணற்ற ஆவணங்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதற்கு தீர்மானித்த அந்தக் கணமே அநாமதேய பாதுகாப்பினை தெரிவுசெய்வதில்லை என்று அவர் முடிவு செய்திருந்தார். ”நான் யார் என்பதனை மறைத்து வைக்கும் நோக்கம் எனக்கிருக்கவில்லை, ஏனெனில் நான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்பதை நான் அறிந்திருந்தேன்” என்று அவர் சொன்னார்.அமெரிக்க வரலாற்றில் பொதுமக்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்தியவர்களான டானியல் எல்ஸ்பேர்க் மற்றும் பிரேட்லி மானிங் இவர்களைப் பின்தொடர்ந்து ஸ்நோவ்டனின் பெயரும் இடம்பெறுகிறது. உலகின் மிகவும் இரகசிய அமைப்புகளில் ஒன்றான அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் (என்.எஸ்.ஏ) விடயங்களை வெளியில் ஒப்படைப்பதற்கு இவர் பொறுப்பாக இருந்துள்ளார். (மேலும்) 18.06.13
___________________________________________________________________________________________________________
விடுதலைப் புலிகள் அமைப்பு ஜெர்மனியில் செயல்படுகிறது: இலங்கை தகவல்
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு இப்போதும் ஜெர்மனியில் தீவிரமாக இயங்கி வருகிறது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் திங்கள்கிழமை கூறியதாவது: ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடோ வெஸ்டர்வெல்லுடன் பெர்லினில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஜெர்மனியில் சமூக அமைப்புகள் என்ற போர்வையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரமாக இயங்கி வருவதாக இலங்கை அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது பற்றி விவாதிக்கப்பட்டது. தமிழ் இன உணர்வாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியைக் கொண்டு ஜெர்மனியில் பெரும் எண்ணிக்கையில் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளப்படுவது குறித்து இலங்கை அரசு கவலை தெரிவித்துள்ளது. எனவே அதுபோன்ற பள்ளிகள், தமிழ் சமூக அமைப்புகள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என ஜெர்மனி வெளியுறவுத்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் ஜி.எல்.பெரீஸ்.
___________________________________________________________________________________________________________
வெயிலின் அருமை வியாதியில் தெரியும்
வ.ஜெயபாண்டி
50 ஆண்டுக்கு முன்பெல்லாம் நம்மவர்கள் குளிர்சாதன வசதியை நினைத்துப் பார்த்ததுண்டா? வீட்டுக்குள் குளிர்சாதனப் பெட்டிகள் இருந்தது உண்டா? பெரும்பாலான வீடுகளில் மின்விசிறிகூட அவசியப்படவில்லை. ஆக, இயற்கை நமது உடலை சூழலுக்கு ஏற்பவே படைத்திருக்கிறது. நமது நாடு வெப்பமண்டலத்தில் இருப்பதால் நமது உடலும் வெப்பத்தைத் தாங்கும் வகையிலே இருந்தது. ஆனால், நாம் நமது வாழ்க்கைமுறையை மாற்றிவிட்டோம். வெப்பத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மரங்களது எண்ணிக்கையைக் குறைத்துவிட்டோம். மனிதத் தலைகளை விட மரங்களின் கிளைகள் அதிகமாக இருக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டோம். விளைவு நம்மால் இயற்கை வெப்பத்தைக் கூட ஏற்கமுடியாத உடல் அமைப்பினராகிவிட்டோம். தென்னை ஓலை, மஞ்சம் புல் ஆகியவற்றிலான கூரை வீடுகளையும் மங்களூர் ஓடு, நாட்டு (சொருகு) ஓடுகளால் கூரை வேய்ந்த மண் சுவரால் ஆன வீடுகளையும் விட்டுவிட்டு சிமென்டை இழைத்துப் பூசிய, டைல்ஸ் பதிக்கப்பட்ட "கொதி அடுப்பு - புறாக் கூண்டு' வீடுகளைக் கட்டிக்கொண்டுவிட்டோம். வாணலியில் வறுபடும் சுண்டெலிகளாக வெந்துபோகிறோம். வெப்பம் என்பது வெறும் சுற்றுச்சூழல் மட்டுமல்ல. அது நமது உடலுக்குத் தேவைப்படும் இயற்கை சக்தி. ஆம்... சூரிய வெயில் மூலம் நமது உடல் நமக்குத் தேவையான வைட்டமின் "டி'யை உற்பத்திசெய்கிறது. (மேலும்) 18.06.13
___________________________________________________________________________________________________________
யாழில் இளைஞர் கடத்தப்பட்டார்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்தோரினால் இன்று திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் சங்குவேலி பிள்ளையார் கோவிலடியில் வைத்தே குறித்த இளைஞன் இன்று மாலை 5.10 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார். ஆணைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைச்சேர்ந்த கந்தையா ஜெயசுதன்( வயது 28) என்ற இளைஞன் கடத்தப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
___________________________________________________________________________________________________________
13 வது சட்ட திருத்தம்: யாருக்கும் வெட்கமில்லை
- மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்
இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அரசியல் அதிகாரத்தில் தமிழர்களின் வகிபங்கு உறுதிபடுத்தப்பட வேண்டும் என்பதே சுமார் முப்பது வருட கால போராட்டத்தின் அடிப்படையாக இருந்து வந்துள்ளது. இப்போராட்டத்தின் பெயரால் வடக்கு கிழக்கு பிரதேச மக்கள் சொல்லொண்ண துயரங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால் மக்களின் தியாகங்கள் அனைத்தையும் அரசியல் ரீதியில் மக்களுக்கான வெற்றிகளாக மாற்றி கொள்வதில் தமிழ் தலைமைகள் தோல்வியையே தழுவியிருக்கின்றன.இழந்தவை மலைபோல் இருக்க பெற்று கொண்டவை கடுகளவு மட்டுமேயாகும். இதற்கு இதுவரை காலமும் எமது மக்களை வழி நடத்திய மிதவாத தலைமைகள் மட்டுமல்ல தீவிரவாத தலைமைகளும் கடைப்பிடித்த பிழையான அணுகு முறைகளே காரணமாகும். 1987 ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக உருவான அதிகார பரவலாக்க முறையே மாகாண சபைகள் ஆகும்.அன்று அதனை குறித்தொதுக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களுடனும் இயங்கும் வாய்ப்பை தமிழீழ விடுதலை புலிகள் அழித்தொழித்தனர்.ஆனாலும் மீண்டும் அதுவே தஞ்சமென இன்று தமிழினம் காத்து கிடக்கிறது. ஏனெனில் இத்தனை போராட்டங்களுக்கு பின்னர் இன்று எமது மக்களுக்கு எழுத்து ரீதியாக எஞ்சியிருக்கின்ற ஒரே தீர்வு மாகாண சபை முறையிலான அதிகார பரவலாக்க வடிவம் மட்டுமேயாகும்.அதுகூட தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடமாகாண மக்களை இன்னும் சென்றடையவில்லை. கிழக்கு மாகாணத்தில் இந்த மாகாண சபை முறைமை அமுலில் இருந்தாலும் அது தன்னுடைய முழு அதிகாரங்களையும் கைப்பற்றிக்கொள்ளும் வல்லமையை எட்டவில்லை. (மேலும்) 18.06.13
___________________________________________________________________________________________________________
இங்கிலாந்தின் 'இண்டிபெண்டன்ட்' பத்திரிக்கையின் ஆசிரியராக இந்தியர் அமல் ராஜன் நியமனம்
இங்கிலாந்து தேசிய பத்திரிக்கையாக விளங்கும் "த இண்டிபெண்டன்ட்" பத்திரிக்கையின் ஆசிரியராக 29 வயதான இந்தியர் அமல் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் தேசிய பத்திரிக்கை ஒன்றில் வெள்ளையர் அல்லாதோர் ஒருவரை இப்பதவிக்கு நியமித்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. முன்னதாக இவர் கருத்தாசிரியராக இருந்தார். "த இண்டிபெண்டண்ட்" பத்திரிக்கையின் ஆசிரியராக அமல் ராஜன் தேர்வு பெற்றுள்ளார் என்ற செய்தியை அப்பத்திரிக்கையின் ஆசிரியர் இவ்ஜெனி லெவ்தேவ் தனது இணைய தள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தொழில் போட்டி உள்ளதால், எங்கள் கம்பெனிக்கு தைரியமான அணுகுமுறை தேவைப்படுகிறது. மிகவும் திறமை வாய்ந்த அமல் ராஜனை எடிட்டர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவரது ஆற்றல், அறிவு, படைப்பு திறன் ஆகியவை இந்த பத்திரிக்கையை மேலும் மேம்படுத்தும் என்று லெவ்தேவ் கூறியுள்ளார். கொல்கத்தாவில் பிறந்தவரான அமல் ராஜன் தனது 3 வயதில் பெற்றொர்களுடன் லண்டன் டூட்டிங்கில் வந்து குடியேறினார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அமல் ராஜன் ஆங்கில இலக்கியம் படித்து பின்னர் ஊடகத் துறைக்கு வந்தார்.
___________________________________________________________________________________________________________
யாழில் பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை - மாணவர்கள் கைது
யாழில் பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை விட்ட இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் பாலியல் ரீதியில் தொடுகை செய்துள்ளதாக குறித்த மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து இரு மாணவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த மாணவி தன்னை தொடர்ச்சியாக இந்த இரு மாணவர்கள் தன்னிடம் பகிடிவதை செய்வதாகவும் தன் பொறுமையாக சென்று வருவதாவும் தன்னால் பொறுக்க முடியாத நிலையிலேயே தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த சில சம்பவங்களை கூறியதாக அந்த மாணவி பாடசாலை நிர்வாகத்திடம் கூறினார். தனது மகளை பாலியல் ரீதியில் சேட்டை விடும் மாணவர்கள் இருவர் குறித்து பாடசாலை நிர்வாகத்திடம் முறையிடப்பட்டது. இருந்தும் நிர்வாகத்தினர் இதனை பெரிதாக்க வேண்டாம் எனக் கூறியதுடன் இரு மாணவர்களையும் தண்டிக்கத் தவறியுள்ளனர். இதன் காரணமாகவே பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இந்த மாணவர்கள் இருவர் விசாரணைக்காக பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
___________________________________________________________________________________________________________
ஜி 20 மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டு தலைவர்களை உளவு பார்த்தது பிரிட்டன்
பிரிட்டனில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் செயல்பாடுகளை பிரிட்டன் உளவுத்துறை ரகசியமாக கண்காணித்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ரகசிய உளவு வேலைகள் குறித்த தகவல்களை வெளியிட்ட அமெரிக்க உளவு அமைப்பான் சிஐஏவின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் இத்தகவலையும் தெரிவித்துள்ளார். அம்மாநாட்டில் பங்கேற்ற அப்போதைய ரஷிய அதிபர் திமித்ரி மெத்வதேவ், மாஸ்கோவில் உள்ள தலைவர்களுடன் செயற்கைக்கோள் தொலைப்பேசியில் பேசியதை இடைமறித்துக் கேட்க அமெரிக்க உளவுத் துறையும் முயற்சி மேற்கொண்டுள்ளது. பிரிட்டன் உளவு அமைப்பான ஜி.சி.எச்.க்யூ., ஜி20 மாநாட்டில் பங்கேற்ற அனைத்து வெளிநாட்டுத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக பதிவு செய்துள்ளது. மாநாட்டின்போது அவர்கள் பரிமாறிக் கொண்ட இ-மெயில்களையும் உளவுத்துறையினர் பதிவு செய்துள்ளனர். லேப்டாப்களில் உள்ள தகவல்களையும் ரகசியமாக பதிவு செய்து கொண்டுள்ளனர். (மேலும்) 18.06.13
___________________________________________________________________________________________________________
கொழும்பு பல்கலை கட்டிடத்திலிருந்து கீழே குதித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு பல்கலைக்கழக கட்டிடத்திலிருந்து மாணவி ஒருவர் கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். இன்று காலை 9.30 மணியளவில் இவர் பல்கலைக்கழக கட்டடம் ஒன்றின் ஐந்தாம் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் 23 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு மாடியிலிருந்து குதித்துள்ளார். இவர் இவ்வாண்டு மே மாதத்திலேயே பல்கலைக்கழகத்திற்கு நுழைந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். இம்மாணவி கீழே குதித்தமைக்கான காரணம் எதுவுமே இதுவரையில் தெரியவில்லை என் அவர் மேலும் குறிப்பிட்டார்.
___________________________________________________________________________________________________________
முழந்தாளிடவைத்த உறுப்பினர் ராஜினாமா?: சபையை கலைக்க இணக்கம்
ஆசிரியையை முழந்தாளிடவைத்த வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவை ராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் வடமேல் மாகாண சபையை எந்நேரத்திலும் கலைப்பதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி தீர்மானிக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடமேல் மாகாண சபையை கலைப்பதற்கு அந்த மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய விருப்பத்தை அக்கூட்டத்தின் போது தெரிவித்துள்ளனர். அத்துடன், ஆசிரியையை முழந்தாளிடவைத்த உறுப்பினரை ராஜினாமா செய்யுமாறு கோருவதற்கும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதுடன் அடுத்த மாகாண சபைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலின் போது அவருக்கு இடம்கொடுப்பதில்லை என்ற தீர்மானமும் இந்த கூட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது.
___________________________________________________________________________________________________________
:இலங்கையில் ‘துக்ளக் - 10
வந்து பார்த்து விட்டு, விமர்சனம் செய்யுங்கள்! – முன்னாள் புலித் தளபதி கருணா பேட்டி
காட்டிக் கொடுத்தேன், ரகசியங்களை அம்பலப்படுத்தினேன்’ என்பதெல்லாம ் பொய்க் கதை. நான் இயக்கத்தில் இருந்தபோது, பல ராணுவ நடவடிக்கைகளை முறியடித்து பல பெரிய வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறேன் என்பது உண்மை. குறிப்பாக, ஆனையிரவைக் கைப்பற்றியதெல்லாம் புலிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஆபரேஷன் என்று கருதப்பட்ட அந்த ராணுவ நடவடிக்கைகளை முறியடித்ததில் நான் பெரும் பங்கு வகித்தேன். ஆனால், நான் வெளியே வராமல் போயிருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். நானும், எனது ஆதரவாளர்களும் வெளியேறாமல் இருந்திருந்தால், இன்னும் பல ஆண்டுகள் சண்டை வேண்டுமானால் நீடித்திருக்கலாம். ஆனால், ஈழம் என்றுமே கிடைத்திருக்காது. ஆரம்பத்தில் இயக்கத்தில் மக்கள் விரும்பிச் சேர்ந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில், கட்டாயமாக ஆள் பிடிக்க ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. எந்த ஒரு போராட்டமும் வெல்வதற்கு மக்களின் ஆதரவு வேண்டும். ஆனால், எந்தக் குடும்பமும் தன் கணவனோ, மகனோ, தந்தையோ போரில் ஈடுபட்டுச் சாவதை விரும்பாது. ஆனால், புலிகள் அதைக் கட்டாயப்படுத்தினார்கள். ஆண்கள் குறைந்தபோது, பெண்களையும் ராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்த்தார்கள். இதனால் மக்கள் விரக்தியடைந்தனர். அந்த நேரத்தில்தான் நார்வே, சமரசத்திற்கு வந்தது. நான் பிரபாகரனிடம் பேசினேன். ‘இதுவரை ராணுவ வெற்றிகளைத்தான் பெற்று வருகிறோம். இதை அரசியல் வெற்றியாக மாற்றி கொள்ள நாம் முன் வரவேண்டும். ராணுவ வெற்றியை வைத்து நாம் என்ன செய்ய முடியும்? (மேலும்) 17.06.13
___________________________________________________________________________________________________________
அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (6)
- எஸ்.எம்.எம்.பஷீர்
"பெரியண்ணா கண்காணிக்கிறார்" (Big Brother is watching)
“நான் ஒரு துரோகியோ , அல்லது ஒரு வீரனோ அல்ல . நான் ஒரு அமெரிக்கன் “ எட்வர்ட் ஸ்னோடென்
“I am neither a traitor, nor a hero. I am an American” ( Edward Snowden )
ஒரு புறம் பிராட்லி மான்னிங்கின் வழக்கு விசாரணைகள் இராணுவ நீதிமன்றில் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இன்னுமொரு பூதம் அமெரிக்காவிற்கு எதிராக கிளம்பியுள்ளது. உலகின் மிகப் பலம் பொருந்திய தனது சொந்த நாடான அமெரிக்காவில் தனது சொகுசான , நன்கு அமைக்கப்பட்ட ,சுதந்திரமான வாழ்க்கை நிலையிலிருந்து நீங்கி ஒன்றில் அமெரிக்க ஆயுள் கைதியாக அல்லது அகதியாக அவலம் நிரம்பிய சூழ்நிலையிலே தனது எஞ்சியுள்ள வாழ் நாட்களை கழிக்க வேண்டி வரும் என்ற நிலையிலும் முன்னாள் சிஐஎயின் தொழிநுட்ப உதவியாளர் எட்வர்ட் ஸ்னோடென் தான் இறுதியாக ஒப்பந்த முறையில் பணியாற்றிய ,அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகாமையகத்தின் (National Security Agency) இரசியங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். "நான் பணத்தினால் உந்தப்பெற்றிருந்தால் இந்த ஆவணங்களை பல நாடுகளுக்கு விற்று பெரும் செல்வந்தனாக மாறி இருக்க முடியும் , ஆனால் உலகத்தில் பணத்தை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் உண்டு " . (மேலும்) 17.06.13
___________________________________________________________________________________________________________
13ஐ காப்பாற்ற இந்தியா மு ன்வர வேண்டும்; டில்லியில் பெருமாள், சங்கரி வலியுறுத்தல்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்காக வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் புதுடில்லிக்கும் பயணமாகியுள்ளார். இந்நிலையில், இந்தியா - இலங்கை ஒப்பந்தம் தொடர்பான மாநாடொன்று புதுடில்லியில் நடைபெற்ற நிலையில் அதில் வரதராஜப் பெருமாளுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமாக ஆனந்தசங்கரியும் பங்கேற்றுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது 'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது எனவும் இந்த திருத்தச் சட்டம் ஏற்படக் காரணமாக இருந்த இந்தியா, இலங்கையுடனான தனது ஒப்பந்தத்தைக் காப்பாற்ற முன்வர வேண்டும்' என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அச்செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. (மேலும்) 17.06.13
___________________________________________________________________________________________________________
மட்டக்களப்பில் மத மோதல்- எட்டு பேர் காயம்
இலங்கையின் கிழக்கே இருமதப் பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பிரதேசம் சுக்கான்கேணியில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்து ஆலய நிர்வாகிகள் மற்றும் மெத்தடிஸ்ட் மிஷன் திருச்சபையினருக்கும் இடையே நடந்த மோதள்களில் மதபோதகர் ஒருவர் காயமடைந்துள்ளார். அப்பகுதியிலுள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக காலத்தின் காலை பூசை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அங்குள்ள மெத்தடிஸ்ட் திருச்சபை தேவாலயத்திலும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது திருச்சபையில் வழிபாடுகள் ஒலிபெருக்கி மூலம் நடைபெறுவது தமது பூசைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது என்று பிள்ளையார் ஆலய நிர்வாகிகள் கூறியதை அடுத்து வாய்த் தகராறுகள் முற்றி மோதல்களாக வெடித்தன என்று அப்பகுதியிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார். இதையடுத்து அந்தத் திருச்சபை தேவாலயமும் அதன் அருகில் இருந்த வீடொன்றும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் பலரிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். சந்தேகத்தின் பேரில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இந்து ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவங்களை கண்டித்தும் அத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யக் கோரியும் மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனியீர்ப்பு பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் இந்தப் பேரணி வேறொரு தினத்தில் நடைபெறும் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. - பி.பி.சி
___________________________________________________________________________________________________________
தமிழ் கைதிகளை வடக்கு, கிழக்குக்கு மாற்றுமாறு கோரிக்கை
கொழும்பு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. இந்த தமிழ் அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், அவர்களைப் பார்வையிடுவதற்காக அவர்களது உறவினர்கள் கொழும்பு வர பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கும் அவர்களது குடும்பத்தினர் ஆளாவதாக அந்த அமைப்பின் தலைவரான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தக் கைதிகளின் குடும்பத்தினர் பெரும் பொருளாதாரச் சிக்கல்களையும் எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ள அவர், அந்த கைதிகளை அவர்களது குடும்பத்தினர் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளார். இது தொடர்பாக தாம் பல தடவைகள் நீதிமன்றங்களைக் கேட்டிருக்கின்ற போதிலும், அவை தம்மை இது தொடர்பில் சிறைச்சாலை நிர்வாகங்களிடம் பேசுமாறு கூறியிருப்பதாகக் கூறியுள்ள நாமல் ராஜபக்ஷ், ஆனால் சிறைச்சாலை அதிகாரிகள் இந்தக் கோரிக்கைக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆகவே இது தொடர்பாக அரசாங்கம் ஒரு கொள்கை முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.(பீபீஸி)
___________________________________________________________________________________________________________
மூதாட்டி கொலை தொடர்பில் இருவர் கைது
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டியை கொலைசெய்தமை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜிப்ரி தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிகண்டியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரும் ஊரணி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 32 வயடைய நபர் ஒருவரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜிப்ரி தெரிவித்தார். இந்நிலையில், வல்வெட்டித்துறையில் தனிமையில் இருந்த 69 வயதுடைய மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு, அவரிடமிருந்து 13 பவுண் நிறையுடைய 5 இலட்சத்து 46 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
___________________________________________________________________________________________________________
இணையத் தளங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்ய நடவடிக்கை
இணையத் தளங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து இயங்கும் இணைய தளங்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய வகையில் இந்த சட்டம் அமையவுள்ளது. இலங்கையிலிருந்து இயங்கும் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், சட்ட வரைவுகளை மேற்கொள்ள கமிட்டி ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் ஊடக அமைச்சின் செயலாளர் சரிதா ஹேரத் தெரிவித்துள்ளார். 67 இணையத் தளங்கள் மட்டுமே ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய பதிவு செய்யாத இணையத் தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போலியான தகவல்களை வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் ஏனைய நாடுகளில் ஊடகம் தொடர்பான சட்டங்கள் காலத்திற்கு காலம் மாற்றியமைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பதிவுக்கு உட்படுத்தப்படாத ஊடகங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சில இணையத் தளங்கள் சமூகத்திற்கு பாரியளவில் தீங்கை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலிருந்து இயங்கும் இணையத் தளங்களை முடக்கிய போதிலும் வெளிநாடுகளிலிருந்து இயங்கும் இணையத் தளங்களை தடை செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
___________________________________________________________________________________________________________
ஜனாதிபதியினால் ஏ9 வீதி இன்று திறப்பு
ச ீனா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அபிவிருத்தி செய்யப்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியான ஏ9 வீதி, அபிவிருத்திப் பணிகள் நிறைவுபெற்று இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு வீதியினைத் திறந்துவைத்ததோடு வீதி அபிவிருத்திப்பணி நிறைவு தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள பெயர் சின்னத்தினையும் திறந்துவைத்தார். ஏ9 விதி அபிவிருத்திப் பணியானது கல்குளமவிலிருந்து யாழ்பாணம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 153 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த வீதி அபிவிருத்திப் பணிக்காக சீன அரசாங்கம் 19.125 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த புனரமைப்புப் பணிகள் கடந்த மே மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. 153 கிலோ மீற்றர் கொண்ட இந்த வீதி புனரமைப்பின் போது 35 பாலங்களும் 273 மதகுகளும் புனரமைக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேவேளை கிளிநொச்சியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மக்கள் வங்கின் கட்டிடமும் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல, நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, கிளிநொச்சி மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி, அரச அதிபர்கள், யாழ். மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள், இராணுவப் படையதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
___________________________________________________________________________________________________________
படகின் மூலம் கோகோஸ் தீவுக்கு சென்ற இலங்கைத் தமிழர்கள்
இலங்கை தமிழர்கள் என சந்தேகிக்கப்படும் 78 பேர் கொண்ட குழுவினர் பிரித்தானிய கப்பல் ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் சென்ற படகு செயலிழந்தன் காரணமாக பிரித்தானிய வர்த்தக கப்பலின் உதவியுடன் அவர்கள் அங்கு சென்றுள்ளனர். அதேவேளை கடந்த 12 ஆம் திகதி கோகோஸ் தீவுக்கு அருகில் மூழ்கிய தமிழ் குடியேற்றவாசிகளை ஏற்றிய படகு தொடர்பான நடவடிக்கைகள் நேற்று இடைநிறுத்தப்பட்டன. மூன்று நாட்கள் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், தொடர்ந்தும் படகை தேடும் பணிகளை மேற்கொள்வதில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் மூழ்கிய படகையும் அதில் இருந்து காணாமல் போனவர்களை தேடி கண்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலியா முன்னர் தெரிவித்திருந்தது.
___________________________________________________________________________________________________________
இரணைமடு: வடக்கின் நான்காவது விமான ஓடு தளம் நேற்று திறப்பு
இரணைமடு விமான ஓடு தளம் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வ மாகத் திறந்து வைக் கப்பட்டது. மேற்படி ஓடுதளம் 1500 மீற்றர் நீளத் தையும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளதுடன் இலங்கை விமானப் படையினரால் இதற்கான செயற்றிட்டம் தயாரிக்கப்பட்டு நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எல். ரீ. ரீ. ஈ. யினரால் முற்றாக சேதமாக்கப்பட்ட மேற்படி ஓடுதளத்தை மீள மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஏ. 60 ரக விமானத்தில் இரணைமடு விமான ஓடு தளத்தை வந்தடைந்ததன் பின்னர் மேற்படி ஓடு தளத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். அதனையடுத்து அப்பிரதேசத்தை ஜனாதிபதி நேரில் பார்வையிட்டார். இந்த விமான இறங்கு தளத்தின் நிர்மாணத்துடன் வடக்கில் மன்னார், வவுனியா, பலாலி விமான ஓடு தளங்களையும் சேர்த்து நான்கு விமான ஓடு தளங்கள் உள்ளன. முப்பது வருடகாலம் எல். ரீ. ரீ. ஈ. யினரின் கேந்திர நிலையமாக இரணைமடு விளங்கியுள்ளது. விமானப் படையினர் இதனைக் கைப்பற்றிய பின் விமான ஓடு தளத்துக்கான திட்டம் வகுத்தல், பொறியியல் மற்றும் நிர்மாணம், தொழில்நுட்பம் அனைத்தையும்பொறுப்பேற்று மீள் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
___________________________________________________________________________________________________________
ஆசிரியை முழந்தாளிடவைத்த மாகாணசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்
நவகத்தேகம இசுறு பாடசாலையின் ஆசிரியை ஒருவரை முழந்தாளிடவைத்த வடமேல் மாகாணசபை உறுப்பினர் சரத்குமாரவை எதிர்வரும் திங்கட்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் பதில் நீதவான் எம்.இக்பால் உத்தரவிட்டுள்ளார். இன்று பிற்பகல் குறித்த வடமேல் மாகாண சபை உறுப்பினரை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பகல் நவகத்தேகம இசுறு பாடசாலையில் கல்வி போதிக்கும் ஆசிரியை ஒருவரையே குறித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் பாடசாலையினுள் முழந்தாளிட வைத்துள்ளார். நேற்று பாடசாலைக்குச் சென்று வடமேல் மாகாணசபை உறுப்பினரின் மகள் அணிந்திருந்த சீறுடை கட்டையாக இருந்ததினால் பாசடாலை ஒழுக்காற்று குழு உறுப்பினராக ஆசிரியை அம்மாணவியை எச்சரித்துள்ளதாகவும், இதனை அம்மாணவி தன் தந்தையிடம் தெரிவித்ததையடுத்து பாடசாலைக்குச் சென்றுள்ள வடமேல் மாகாண சபை உறுப்பினர் குறித்த ஆசிரியையை ஏசி, எச்சரித்து பின்னர் முழந்தாளிட வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் குறித்த ஆசிரியை இது தொடர்பில் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இன்று சனிக்கிழமை காலை குறித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
___________________________________________________________________________________________________________
ஈழவிடுதலைப் போரின் ஓர் இணையற்ற போராளி - IPT வரதன்
IPT என ஈழப்புரட்சி அமைப்பு உறுப்பினர்களாலும் அதன் ஆதரவாளர்களினாலும் தோழமையுடனும் அன்புடனும் அழைக்கப்பட்ட ஆற்றல்மிக்க ஒரு போராளி யின் திடீர் மறைவை நாம் துயருடன் இத்தால் பகிர்ந்து கொள்கின்றோம். 26.01.1956ல் வவுனியாவில் பிறந்த வரதராசா சிதம்பரப்பிள்ளை என இயற்பெயர் கொண்ட IPT, 21.05.2013ல் பரிஸ் புறநகர் பகுதியான சுவாசி– லு–றுவாவில் ((Choisy-le-Roi)) அவர் தங்கியிருந்த அகதிகள் விடுதியில் திடீர் மரணமடைந்திருந்தார். எப்போதும் சமூகம் பற்றிய சிந்தனையுடனும் எவ்வேளையிலும் செயலூக்கத்துடனும் காணப்படும் IPTயின் மரணம் என்பதுஎமக்கு ஒரு தீராத துயரச்செய்தியே! எல்லாவற்றிற்கும் மேலாக அவரது தமிழ் தேசிய விடுதலை மீதான அர்ப்பணிப்பு என்பது வரலாற்றில் பதியப்படவேண்டிதொன்று. இவரது ஆற்றலானது பல பரிமாணங்களை உடையதென்பது இங்கு கவனிக்கத்தக்கது. அவரது கடந்தகால செயற்பாடுகளில் சிலவற்றை வெளிக்கொணர்வதன் மூலம் எமது எதிர்காலச் சமூகம் அனுமானிக்க வேண்டிய பிரதான அம்சங்களை சுட்டிக்காட்டமுடியும். IPTயின் வாழ்க்கைச் சம்பவங்களும் அவரது ஈடுபாடுகளும் அவர் பெற்ற அனுபவங்களும் கடந்த முப்பது ஆண்டு கால தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுடன் இரண்டறக் கலந்தவை. வவுனியாவில் பிறந்த இவர் வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் உயர் கல்வியை கற்றிருந்தார். அதன் பின்பு 1978ல் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியலாளராக தேசிய சான்றிதழ் பெற்றிருந்தார். மொறட்டுவ பல்கலைக்கழக மாணவராக இருந்தவேளை 1977ல் இடம்பெற்ற இனப்படுகொலைகள் இவரை மிகவும் பாதித்திருந்தன. சிங்கள இனவாதம் அரச ஆதரவுடன் இனவன்முறையை கட்டவிழ்த்துவிட்டநேரமது. (மேலும்) 16.06.13
___________________________________________________________________________________________________________
முன்னாள் சிஐஏ உளவாளி: ஸ்னோடென்னுக்கு ஆதரவாக ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் ரகசிய கண்காணிப்பு திட்டத்தை அம்பலப்படுத்திய சிஐஏ முன்னாள் உளவாளி ஸ்னோடென்னுக்கு ஆதரவாக ஹாங்காங்கில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சார்பில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இணையதளம் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை அமெரிக்கா ரகசியமாக கண்காணித்து வருகிறது என சிஐஏ முன்னாள் உளவாளி எட்வர்ட் ஸ்னோடென் அம்பலப்படுத்தினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஸ்னோடென் ஹாங்காங்கில் தஞ்சம் புகுந்துள்ளார். இதற்கிடையே ஸ்னோடென்னை தங்கள் நாட்டுக்கு ஹாங்காங் திருப்பி அனுப்ப வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஸ்னோடென்னுக்கு ஆதரவாக சனிக்கிழமை ஹாங்காங்கில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவரை பாதுகாக்க சீனா நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
___________________________________________________________________________________________________________
இன்டர்நெட் இணைப்பு: கூகுள் நிறுவனம் புதிய முயற்சி
பூமியின் வளி மண்டலத்தில் ராட்சத பலூன்களை பறக்கவிட்டு, அதில் பொருத்தப்பட்டுள்ள ஆன்டெனா மூலம் இன்டர்நெட் இணைப்பை வழங்கும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகளை ஆப்டிகல் பைபர் கேபிள்களை பதித்து தொலைதூரப் பகுதிகளில் தர முடியாத நிலையில், அங்கு இந்தத் திட்டத்தை செயல்படுத்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பூமியின் வளி மண்டலத்தில் உள்ள "ஸ்ட்ராடோஸ்பியர்' அடுக்கில் ஆன்டெனா பொருத்தப்பட்ட ராட்சத பலூன்களை பறக்கவிட்டு சோதனை நடத்தி வருகிறது கூகுள் நிறுவனம். ஆன்டெனாக்கள் மூலம் நியூஸிலாந்தின் லீஸ்டன் நகரில் உள்ள 50 வீடுகளுக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பலூனில் உள்ள ஆன்டெனாவிலிருந்து சிக்னல்களை பெற வீடுகளில் "ரிசீவர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. தொடக்க நிலையில் உள்ள இந்த ஆராய்ச்சி, சிறப்பாக செயல்பட்டு வருவதாக திட்ட இயக்குநர் மைக் காஸ்சிடி கூறியுள்ளார். இச்சோதனையில் வெற்றி கிடைத்தால், தொலைத் தொடர்பு வசதிகளை செய்து தர முடியாத பகுதிகளில் ஆயிரக்கணக்கில் ஆன்டெனாவுடன் கூடிய பலூன்களை பறக்கவிட்டு இன்டர்நெட் இணைப்பை வழங்க முடியும் என்று கூகுள் நிறுவனம் கருதுகிறது.
___________________________________________________________________________________________________________
திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார்
தென்னிந்திய பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன்(58) மாரடைப்பால் இன்று அவரது வீட்டில் காலமானார். சென்னை நெசப்பாக்கத்தில் ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று பகல் 12 மணி அளவில் வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து உயிரிழந்தார். மணிவண்ணன் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 50 படங்கள் இயக்கி உள்ளார் .கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் இவரது சொந்த ஊர் ஆகும். பாரதிராஜாவிடம் 1979-ல் உதவி இயக்நனராக சேர்ந்தார். நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓய்வதில்லை படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். அவர் 1982-ல் முதன்முதலில் இயக்கிய படம் கோபுரங்கள் சாய்வதில்லை. இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, அமைதிப்படை, ஆண்டான் அடிமை உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். (மேலும்) 16.06.13
___________________________________________________________________________________________________________
“பந்தாடப்படும் மாகாணசபை அதிகாரங்களை முன்நிறுத்தி முரண்படும் தமிழ்-முஸ்லிம் அரசியல்”
(கலாநிதி எம். எஸ். அனீஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானத்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்)
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் கூட இன்றுவரை வடக்கின் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றாக அமர்ந்து தமது எதிர்காலம் பற்றி வெளிப்படையாகப் பேச முன்வரவில்லை; காத்திரமான முயற்சிகளின் மூலமாக இந்த இரண்டு இனங்களின் எதிர்கால ஒற்றுமைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன்வரவில்லை. இத்தகைய பின்னின்று தயக்கமுறும் நிலைப்பாடு இந்த இரு சமூகங்களையும் ஒரு இருண்ட யுகத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்கான வழிகோலாகவே அமைந்துவிடும்.
வடமாகாண சபைத்தேர்தல் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என ஜனாதிபதி அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த தேர்தலை முன்னிறுத்திய பல்வேறு கருத்துப்பரிமாற்றங்கள் பல மட்டங்களில் இடம்பெற்று வருவதானது இன்றைய இலங்கை அரசியலில் காணப்படும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். அமைச்சரவை கூட்டங்களில் கூட அமைச்சர்கள் இரு பிரிவினராக பிரிந்துகொண்டு வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுமளவிற்கு இது ஒரு சூடான விடயமாகியுள்ளது. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே இது தொடர்பான பல்வேறு அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இன்றைய நிலையில் அவ்வாறானதொரு தேர்தல் நடக்குமா என்பதே சந்தேகமாகியுள்ள நேரத்தில் நாளாந்தம் பல்வேறு கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இன்று வழமையான ஒன்றாகிவிட்டது. இந்த ஒன்றுக்கொன்று முரண்பட்ட அபிப்பிராயங்களில் அரசியல் கட்சிகளினதும் அரசியல் இலாபங்களை மையப்படுத்தி செயற்பட்டு வருபவர்களின் கருத்துக்களும், இனவாத அடிப்படையில் சிந்திப்பவர்களின் எண்ணங்களுமே மேலோங்கி காணப்படுவதானது மிகவும் ஆபத்தானதொன்றாகும். இந்த விடயமானது அநேகமான ஜனநாயகவாதிகளும், சமாதான செயற்பாட்டாளர்களும் வேண்டிநிற்கின்ற மீள்நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட காத்திரமான இன ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு போதும் வழிவகுக்காது என்பதை நாம் அனைவரும் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். (மேலும்) 15.06.13
___________________________________________________________________________________________________________
அகவை 80ஐ காணும் ஜனநாயகத்தின் ஒப்பற்ற குரல் -வீரசிங்கம் ஆனந்த சங்கரி அவர்கள்
- வி.சிவலிங்கம்.
அகவை 80 இனை எட்டியுள்ள ஆனந்த சங்கரி அவர்களின் வாழ்வும் பல்வேறு போராட்டங்களினூடாக புடமிட்டு துலங்கும் ஒன்றுதான். எட்டு சகோதர, சகோதரிகளோடு பிறந்த ஆனந்த சங்கரி அவர்களின் குடும்பம் பெரியது என்ற போதிலும் ஒவ்வொருவருமே தமக்கே உரித்தான விதத்தில் தாம் வாழ்ந்த சமூகத்திற்கு சேவை புரிந்தனர். புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் அதிபராக இருந்த இவரது தந்தை சாதி வெறிக்கு எதிராக தனித்துப் போராடியவர். மத வெறியர்களும், சாதி வெறியர்களும் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், மற்றும் தேனீர்க் கடைகள் என பொது இடங்களில் சக மனிதர்களை மிகவும் கீழ்த் தரமாக நடத்திய அவ் வேளையில் பாடசாலை அனுமதியில் சாதிப் பாகுபாட்டிற்கு எதிராக முன்மாதிரியான அதிபராக செயற்பட்ட ஓர் சிங்கம் அவரது தந்தை வீரசிங்கம் அவர்களாகும். இக் குடும்பத்தின் ஒவ்வொருவரும் வன்முறைக்கும், அராஜகத்திற்கும் எதிராக குரல் கொடுத்தவர்கள். அதற்காக அதிக விலை கொடுத்தவர்கள். சாவகச்சேரி பிரஜைகள் குழுவின் தலைவராக இருந்த இராஜசங்கரி அவர்கள் இந்திய சமாதானப் படைகளின் அத்துமீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பினார். அதனால் எம்மவர்களால் படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப்புலிகளைப் பகிரங்கமாக விமர்சித்தார் என்பதற்காக அவரது இன்னொரு சகோதரர் ஞானசங்கரி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். தமது தந்தையின் படுகொலைக்கு எதிராக குரல் எழுப்பிய ஞானசங்கரி அவர்களின் புதல்வர்கள் இருவர் இரவோடிரவாக கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவரின் இன்னொரு சகோதரனான கணேச சங்கரியின் புதல்வரான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த யோகசங்கரி தமிழ் நாட்டில் எம்மவர்களால் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு சகோதரனான பரதசங்கரியின் மகள் லண்டனில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்;. இவ்வாறாக இவர்களது குடும்பத்தை ஆயுத கலாச்சாரம் வெகுவாக பாதித்து உள்ளது. (மேலும்) 15.06.13
___________________________________________________________________________________________________________
13வது , இதையும் தோற்போமா?
- ஸ்ரீதரன்-சுகு
இன்று 13வதுக்கு எதிரான ஆவேச கூச்சல் தீவிரமடைந்துள்ளது. சம்பிக்க ரணவக்க, பொதுபல சேன, விமல் வீரவன்ச, அமரதேவா, பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர் நானா விதமான பிக்குகள் அமைப்புக்கள் எல்லோரும் ஆரவாரிக்கிறார்கள். 13வதுக்கு எதிராக சிங்களவர்களை திரட்டப் போவதாகவும் நீதிமன்றம் செல்லப் போவதாகவும் தீவிர அமைப்புக்கள் கூக்குரலிடுகின்றன. சகல சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக ஒரே தருணத்தில் போர் தொடுக்கும் பாணியில் காரியங்கள் நடைபெறுகின்றன. உணவுப் பழக்கம், கலாச்சாரம், சமயம், வாழிடம் எல்லாம் பிரச்சினையாக்கப்படுகிறது. பௌத்த சிங்களவர்களின் தேசம் பற்றி பேசப்படுகிறது. இது மற்றவர்களின் - தேசத்தின் மீதான அவர்களின் உரிமையை மறுக்கிறது. இது மிகவும் பாரதூரமான நிலையாகும் .கால் நூற்றாண்டுகளின் பின்னர் இது தீவிரமடைந்துள்ளது. அறுத்துக் கொட்டப்பட்ட மாகாணசபை முறையை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த 13வது ஈ.பி.ஆர்.எல்.எப் ஐ பொறுத்த வரை மிகவும் முக்கியமானது. இதனை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கான போராட்டத்தில்தான் பல நூற்றுக்கணக்கான போராளிகள் உயிரிழந்தார்கள். தோழர் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டார். தலைவர் அமிர்தலிங்கம் இதனை ஆதரித்ததற்காகவே கொல்லப்பட்டார். (மேலும்) 15.06.13
___________________________________________________________________________________________________________
கனடாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ் வாசி ஒருவரிடம் 46 இலட்சம் ரூபா வாங்கிய வங்கி ஊழியர் தலை மறைவு
வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட யாழ். வங்கி ஒன்றின் ஊழியரைத் தேடி யாழ் பொலிஸார் வலைவிரித்துள்ளதாக யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார். யாழ். நகரப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கனடாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 46 இலட்சத்து 8550 ரூபாவை வாங்கி பணமோசடியில் ஈடுபட்டதுடன் குறித்த நபரை ஏமாற்றி வந்த யாழிலுள்ள வங்கி ஒன்றின் ஊழியரைத் தேடிவருவதாக அவர் குறிப்பிட்டார். குறித்த வங்கி ஊழியர் வங்கியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாகவும் பொலிஸ் புலன் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி கூறினார். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறிய வங்கி ஊழியரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவரைக் கைது செய்யப்படலாம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
___________________________________________________________________________________________________________
கோட்டாபய கொலை முயற்சி வழக்கு ஒத்திவைப்பு
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபருக்கு பொலிஸார் அனுப்பிய புலன்விசாரணை அறிக்கை குறித்து வழக்கு தொடுநருக்கு சட்டமா அதிபர் இதுவரை அறிவித்தல் வழங்காத காரணத்தினால் இவ்வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேற்படி வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றபோதே பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய வழக்கை ஒத்திவைத்தார். சந்தேகநபர்களான தர்மலிங்கம் தர்மதரன், சிவலிங்கம் ஆருரன், லத்திப் மொகமட் ஆரிப் மற்றும் பொன்னுசாமி கார்த்திகேசு ஆகியோர் கொள்ளுப்பிட்டி, பித்தளை சந்தியில் வைத்து கடந்த 2006 ஆம் ஆண்டு டிசெம்பர் 1 ஆம் திகதி ஒரு முச்சக்கர வண்டியில் குண்டு ஒன்றை பொருத்தினர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலுள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைமையின் அறிவுற்றதலுக்கு அமைய சிவலிங்கம் ஆரூரன் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டம்தீட்டினர் என குற்றஞ்சாட்டப்பட்டது. (மேலும்) 15.06.13
___________________________________________________________________________________________________________
ராஜித சேனாரத்னவுக்கு இருக்கின்ற முதுகெலும்பு அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லை
- மனோ கணேசன்
13ம் திருத்தத்தில் கை வைப்பதற்கு நாட்டில் எவருக்கும் நாம் இடமளியோம். அதனை பாதுகாக்க நான் எனது பதவியையும் இழக்க தயார் என மீன்பிடி மற்றும் நீரியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். எனது மிக நீண்டகால நண்பர் ராஜித சேனாரத்னவுக்கு இருக்கின்ற இந்த முதுகெலும்பு அரசாங்கத்தில் இன்று இருக்கின்ற எந்த ஒரு தமிழ் அரசியல்வாதிக்கும் இல்லை என்பது நிதர்சனமிக்க கவலை தரும் உண்மையாகும் என என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மீன்பிடி மற்றும் நீரியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, 13ம் திருத்தம் தொடர்பில் இன்று தெரிவித்துள்ள பகிரங்க நிலைப்பாடு தொடர்பாக மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 13ம் திருத்தத்தின் மீது கை வைக்க விட மாட்டேன், அதற்காக எனது பதவியையும் இழக்க தயார் என்று ஊடகவியலாளரிடம் இன்று ராஜித கருத்து தெரிவித்துள்ளார் என்று தெரிந்து கொண்ட உடனேயே, ராஜிதவை தொலைபேசியில் அழைத்து எனது பாராட்டுகளை தெரிவித்தேன். (மேலும்) 15.06.13
___________________________________________________________________________________________________________
43 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேஷியாவில் கைது
43 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேஷியாவில் கைது செய்பய்பட்டுள்ளனர். இந்தோனேஷியரின் மேற்கு ஜாவா பிரதேசத்தின் சியான்ஜூர் பிரதேசத்தில் 100 சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களில்ழ 43 பேர் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு ட்ரக் வண்டி மற்றும் ஐந்து மினி பஸ்களின் ஊடாக குறித்த நபர்கள் பயணித்துக் கொண்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தென் சியான்ஜூர் பிரதேசத்தில் மற்றுமொரு புகலிடக் கோரிக்கையாளர்கள் கும்பலை கைது செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் 43 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணம் செய்திருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் இந்தோனேஷியாவின் ஊடாக அவுஸ்திரேலியாவை சென்றடைய முயற்சி செய்துள்ளனர்.
___________________________________________________________________________________________________________
2025ல் உலக மக்கள் தொகை 810 கோடியாகும் : ஐ.நா.
2025ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 810 கோடியாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. இன்று உலக மக்கள் தொகை 720 கோடியாக இருக்கும் நிலையில், இன்னும் 12 ஆண்டுகளில் அதாவது 2025ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 810 கோடியாகவும், 2050ஆம் ஆண்டு 960 கோடியாகவும் உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை இந்த காலக்கட்டத்தில் பெரிய அளவில் உயராது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதிருக்கும் மக்கள் தொகையை விட, 2050ஆம் ஆண்டில், ஆப்ரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மக்கள் தொகை சற்று அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
___________________________________________________________________________________________________________
ஈழத் தமிழர்களுக்கு ஜெயலலிதா ஆதரவு: கோத்தபய ராஜபட்ச
ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்கமடையச் செய்துள்ளது. இதை இலங்கை அதிபரின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபட்ச வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கோட்டெலவாலா ராணுவ பல்கலைக் கழகத்தில் அவர் பேசியது: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இருப்பது, இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமே தமிழக அரசியலில் இலங்கை தமிழர் விவகாரம் மிக முக்கியமான அம்சமாக இருப்பதுதான். குறிப்பாக தேர்தல் சமயத்தில் இலங்கை விவகாரம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது. சமீபகாலமாக இலங்கை அரசை சர்வதேச தளத்தில் எதிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு நெருக்குதல் அளித்து வருகிறார். இது இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாகும். (மேலும்) 15.06.13
___________________________________________________________________________________________________________
டான் யாழ். ஒளியில் பார்வைகள்
டான் யாழ் ஒளியில் யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பாகவிருக்கும் வெள்ளிக்கிழமை (14-06-2013) பார்வைகள் நிகழ்ச்சியில் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சில யோசனைத் திட்டங்களை அரசாங்கம் முன்வைத்துள்ளமை தொடர்பாக டான் தொலைக்காட்சி நேயர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து கருத்து கேட்கப்படவிருக்கின்றது. http://www.facebook.com/groups/parvaigal/ எனும் குழுமத்தில் இணைந்து உங்கள் கருத்துக்களை எழுத்துமூலம் பதிவதன் மூலமாகவோ அல்லது நேரலையில் உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய வெள்ளிக்கிழமை (14 -06-2013) இலங்கை நேரம் இரவு 10.00 மணிமுதல் 12 மணிவரை (ஐரோப்பிய நேரம் 6.30 முதல் 8.30 ) தொலைபேசியூடாக அழைப்பதன் மூலமாகவோ நீங்களும் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளலாம். இலங்கையில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0094212221944
___________________________________________________________________________________________________________
வீட்டுக்கு எதிரான பந்தயம்
-தயான் ஜயதிலகா
13வது திருத்தத்தை பாதுகாக்கத் தவறியதில் ரி.என்.ஏக்கு உள்ள பங்கும் குறைவானதல்ல, அதற்கு கட்டுப்படாமல் இருந்ததுடன், அதற்கு அப்பால் செல்லக்கூடிய வகையில் சந்திரிகா குமாரதுங்க கொண்டுவந்த சிக்கலான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்தது, மற்றும் பெரும்பாலும் அதைத்தாண்டிய சொல்லாட்சியின் பக்கம் நகர்ந்தது (சாத்தியமான அரசியல் புரட்சி பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மை வழங்கியது) போன்றவை அது இழைத்துள்ள தவறுகளாகும்.
சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் என்ற வகையில், அல்லது இன்னமும் துல்லியமாகச் சொல்வதானால் சிங்கள மற்றும் தமிழ் தேசியவாதிகள் ஆகியோர்கள் டெல்பி கோவில் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களான “அளவுக்கதிகமாக எதுவுமில்லை” என்கிற வாசகங்களுக்கான நல்ல காரணங்கள் உள்ளன என்பதை இறுதியில் கற்றுக்கொள்வார்கள், அதேவேளை புத்தர் தனது நடுப்பாதை தத்துவங்களிலும் மற்றும் தங்க மனிதரான அறிஞர் அரிஸ்டாட்டிலும் இதை வலியுறுத்தியுள்ளார்கள். பொதுநலவாய உச்சிமாநாட்டுக்கு ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் உள்ளதுக்கு முன்பே அரசாங்கம் சில நசுக்கல் முயற்சிகளில் இறங்கியிருந்தது. முதலாவது 13வது திருத்தத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவது, மற்றது ஊடகங்களை அடக்கி வைப்பது என்பதாகும். பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு நடைபெறும்போது தண்டனை விலக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த நகர்வுகள் பொதுநலவாயத்தில் ஒரு பலகீனத்தை எதிரொலிக்கலாம், இது ஆசியான் நாடுகளால் தங்கள் ஆட்சி நடைமுறைகளில் மாற்றங்களை செய்ய இயலவில்லை என்கிற கடின முரண்பாட்டை ஏற்படுத்துவதுடன் மியான்மாருக்கு தலைமைப்பதவியை ஒப்படைப்பதற்கான விலையை செலுத்தக்கூடியதாகவும் இருக்கிறது என்றாகிவிடும். (மேலும்) 14.06.13
___________________________________________________________________________________________________________
இரணைமடு விமான ஓடுதளம் சனியன்று திறப்பு
கிளிநொச்சி, இரணைமடுவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஓடுதளம் இலங்கை விமானப்படையினரால் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஓடுதளம் சனிக்கிழமை 15 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே இந்த ஓடுதளம் திறந்துவைக்கப்படவுள்ளது. இலங்கை விமான படை வரலாற்றில் முதன்முறையாக விமான படையினரின் சக்தியை பயன்படுத்தி சர்வதேச தரத்திற்கு அமைவாக இந்த ஓடுதளம் நிர்மாணிக்க்பட்டுள்ளது என்றும் விமானப்படை அறிவித்துள்ளது. ஓடுதளம் 1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டிருக்கின்றது. இதற்கான திட்டம், பொறியியல், நிரமாணம், உபகரங்கள் மற்றும் தொழில்நுட்பம் என்பன விமான படையினருடையது என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. அதேபோல இலங்கை விமானப்படையிடம் இருக்கின்ற மிக பெரிய விமானமான சீ-130 விமானத்தையும் இந்த ஓடுதளத்தில் ஏற்றியிறக்க கூடியவகையில் நிரமாணிக்கப்பட்டுள்ளது. . (மேலும்) 14.06.13
___________________________________________________________________________________________________________
வடக்குத் தேர்தலை 13 ஆவது திருத்தத்திற்கு அமைவாகவே நடத்த வேண்டும் : அஸி. அதிகாரிகளிடம் யாழ். ஆயர் வலியுறுத்தல்
வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு 13ஆவது திருத்தச் சட்டமானது மிகவும் தேவையான ஒன்றாகக் காணப்படுகின்றது. இச் சட்டத்திற்கு அமையவே அரசாங்கம் வடமாகாணத் தேர்தலை நடத்தவேண்டும். தேர்தலை நடத்துகின்றபோது ஜனநாயக அதிகாரங்களை தமிழ் மக்களும் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். எனவே 13ஆவது திருத்தச் சட்டத்தைப் புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் தேர்தலை நடத்தத் திட்டமிடுவது பிழையான முடிவாகும் என அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தெற்காசிய அரசியல் ஆலோசகர் மைக் ஹில்மனிடம் யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்திர நாயகம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தெற்காசியாவிற்கான அரசியல் ஆலோசகர் மைக் ஹில்மன் உள்ளிட்ட இரண்டு பேர் நேற்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் யாழ். மறைமாவட்ட ஆயரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பின்போது 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் வடமாகாணத் தேர்தல் தொடர்பாகவும் வினாவியபோதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இவ் விடயம் தொடர்பாக அவர் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாணத் தேர்தலை அரசாங்கம் நடத்துமா? இல்லையா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இத் தேர்தலை நடத்தி தமிழ் மக்களுக்கும் சந்தர்ப்பங்களைக் கொடுக்கவேண்டும். யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வலிகாமம் வடக்கு மக்கள் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர். அத்துடன் வலிகாமம் வடக்கில் 6ஆயிரத்து 183 ஏக்கர் காணிகளை இராணுவ தேவைகளுக்காக அரசாங்கம் சவீகரித்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். . (மேலும்) 14.06.13
___________________________________________________________________________________________________________
சேதுக் கால்வாய் - யாருக்கு லாபம்?
என். முருகன்
2008-ஆம் ஆண்டு ஆறு வல்லுநர்கள் இடம்பெற்ற கமிட்டி, டாக்டர்.ஆர்.கே. பச்சோரி எனும் நிபுணரின் தலைமையில் அமைக்கப்பட்டு சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தின் பல அம்சங்களும் ஆராயப்பட்டன. அக்கமிட்டியின் இறுதி அறிக்கையில், ""இந்தத் திட்டம் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று, தோல்வியில் முடியும் என்பதால் அதைக் கைவிடலாம்'' எனக் கூறியது. திமுகவின் இடைவிடாத முயற்சியின் காரணமாக இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. ஏற்கெனவே இத்திட்டத்திற்கான முன்னோடிச் செலவாக ரூ. 800 கோடி விரயம் செய்யப்பட்டுவிட்டது. சரி, இதுபோன்ற திட்டம் தமிழகப் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் அத்தியாவசியம் என திமுகவினர் மேடைதோறும் முழங்குவது அவர்களது வழக்கமான, அலங்கார மேடைப்பேச்சு கலாசாரமா அல்லது சரியான வகையிலான திட்ட மதிப்பீடா என்பதைப் பார்க்கலாம். இதுபோன்ற ஒரு கால்வாய் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதில் வரும் வருமானம் அந்தத் திட்டம் தொடர்ந்து இயங்கப் போதுமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் முதல் விதி. உதாரணமாக, தஞ்சாவூர் நகரத்தில் ஒரு விமான தளத்தை உருவாக்கி அங்கு விமான சேவையைத் தொடங்க வேண்டும் என ஒரு திட்டத்தை நாம் தீட்டினால், எவ்வளவு பயணிகள் அந் நகருக்கு விமானத்தில் பயணம் செய்வார்கள், விமானக் கட்டணம், செலவு ஆகியவை போக எவ்வளவு லாபம் வரும் என்று கணக்கிடப்படும். (மேலும்) 14.06.13
___________________________________________________________________________________________________________
யாழ். நகரில் இரு இளைஞர் குழுக்களிடையே மோதல் - இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் கே.கே. எஸ் வீதி தட்டாதெருச் சந்தியில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பத்தில் 2பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ஹயஸ் வாகனத்தில் வந்த இளைஞர் குழுவுக்கும், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவில் வந்த இளைஞர் குழுவுக்கும் இடையிடையே மேற்படி மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றுக் காலை குறித்த இரு இளைஞர் குழுக்களுக்கும் இடையில் யாழ் திருவேலிப் பகுதியில் உள்ள ஒரு மதுபான நிலையத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மேற்படி சம்பவத்தில் முரண்பட்ட இரு குழுவினரும் கே.கே.எஸ். வீதியில் அமைந்துள்ள மற்றுமொரு மதுபான விற்பனை நிலையத்தில் சந்தித்ததை அடுத்து இரு குழுக்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் ஹயஸ் வாகனம் முழுமையாக அடித்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஹயஸ் வாகனத்தில் வந்த இளைஞர் பலத்த தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வீதியில் விழுந்து கிடந்தனர். இதன் பின்னர் அங்கு வந்த பொது மக்களால் காயப்பட்ட இருவரும் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒரு மணித்தியாலயம் வரைக்கும் நீடித்த மேற்படி மோதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் நீண்ட நேரத்தின் பின்னரே வந்து சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்வம் தொடர்பாக பொலிஸார் காயமடைந்துள்ள நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
___________________________________________________________________________________________________________
இந்த நிலை மாறவேண்டும்.
- சுகு-ஸ்ரீதரன்
மக்களின் ஜனநாயக சுதந்திரம், அடிப்படை உரிமைகள் , சமூகங்களிடையே நல்லிணகத்தை கட்டியெழுப்புவதிலுமே ஒரு நாடு எழுச்சி கொள்ள முடியும். அறவுணர்வற்ற தீர்க்கதரிசனமற்ற எமது செயற்பாடுகளால்தான் 13வது இழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது அரசியல்வாதிகளின் சொற்சிலம்பமாகத்தான் இருக்கிறது. இலங்கையில் மக்களுக்கு அதிகாரங்களை பரவலாகுவதற்கு கொண்டுவரப்பட்ட முறை அது. அரசாங்கத்தின அதிகாரங்களை மத்திய அரசுக்கு அடுத்த மட்டத்தில் செயற்படுத்துவதற்கும் சிறுபான்மை சமூகங்களின் அரசு முறையில் பங்கு பற்றுதலேயாகும். அதனை இல்லாமல் செய்வது சிறுபான்மையினரின் உரிமைகளை மறுப்பதும் தேசிய வாழ்விலிருந்து அவர்களை அந்நியப்படுத்துவதாகவும் அவர்களை கீழ்படிவுள்ளவர்களாக வாழ நிர்ப்பந்திப்பதாகவும் இருக்கின்றது. இலங்கையின் சாதாரண பெரும்பான்மையின மக்கள் மத்தியில் அதிகாரப்பரவாக்கல் நிகழக்கூடாது என்ற எண்ணம் கிடையாது. சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் சமஷ்டி முறையிலான தீர்வை சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய முடிந்தது. தொலைதூர தென்பகுதியில்கூட அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார்கள். ஆனால் இன்று இனவாத அடிப்படையில் மக்களை ஒன்றிணைக்க முயல்கிறார்கள். . (மேலும்) 14.06.13
___________________________________________________________________________________________________________
அரசியல்வாதிகளே இனப்பிரச்சினையை உருவாக்கினர்: ரொஹான் குணரட்ன
'இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை. இல்லாத இனப்பிரச்சினையை உருவாக்கியது அரசியல் வாதிகள். அரசியல்வாதிகள் தமது சுயலாபத்திற்காக உருவாக்கியதே இனப்பிரச்சினை' என சிங்கப்பூர் சர்வதேச கற்கைகள் பாடசாலையின் விரிவுரையாளர் ரொஹான் குணரட்ன தெரிவித்தார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், யாழ். பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய 'மீள் இணக்கத்தில் உயர் கல்வியின் பங்கு' எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் இன்று யாழ். கீறீன் கிறஸ் விருந்தினர் விடுத்தியில் நடைபெற்றது. இதன்போது, போருக்குப் பின்னரான சகிப்புத் தன்மை மற்றும் சகவாழ்வினை ஊக்குவித்தலும், எனும் தலைப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, 'நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம்களிடையே நான் வேற்றுமையை காணவில்லை. ஆனால், அரசியல்வாதிகளிடமும் இனத்தவர்களிடமும் வேற்றுமை காணப்படுகின்றதாக கூறுகின்றார்கள். (மேலும்) 14.06.13
___________________________________________________________________________________________________________
புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (100)
100. துப்புத் துலக்குபவர்களின் கேள்வியே துப்பைத் துலக்கும் சந்தர்ப்பங்கள்!
புலிகளின் வதை முகாம்களுக்குப் பொறுப்பான ‘காந்தி’ என்னைத் தாக்கிய போது கேட்ட கேள்வி என்னைப் பெரிதும் சிந்திக்க வைத்தது. கலாநிதி கே.சிறிதரனை நான் 1990ஆம் ஆண்டில் தங்கியிருந்த மீசாலை வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும், அதன் பின்னர் அவரை இரகசியமாக கொழும்புக்கு அனுப்பி வைத்ததாகவும் அவன் என்னிடம் குற்றம் சாட்டியிருந்தான். அவன் கேட்ட விடயங்களில் பாதி உண்மையும், பாதி தவறும் இருந்தது. சிறீதரன் ஒருநாள் எனது வீட்டில் தங்கியிருந்தது உண்மை என்ற போதிலும், அவரை நான்தான் கொழும்புக்கு அனுப்பி வைத்தேன் என்ற அவனது கூற்று தவறானது. ஆனால் எப்படியோ சிறீதரன் எனது மீசாலை வீட்டில் தங்கியது புலிகளுக்குத் தெரிந்துவிட்டது. புலிகளுக்குத் தெரிந்திருக்காது என நினைத்துத்தான் நான் புலிகளுக்குப் பொய் சொல்லியிருந்தேன். அது தவறாகி விட்டது. ஆனால் இப்பொழுது கேள்வி என்னவென்றால், சிறீதரன் எனது மீசாலை வீட்டில் தங்கியது எப்படி புலிகளுக்குத் தெரிய வந்தது என்பதுதான். ஏனெனில் அவர் புலிகளிடம் பிடிபடவில்லையாததால், அவரிடமிருந்து புலிகளுக்கு தகவல் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. (மேலும்) 13.06.13
___________________________________________________________________________________________________________
வடமாகாணசபை தேர்தலிின் போது சர்வதேச கண்காணிப்பு, சிவில் ஆளுநர் என்பவை எதிர்கட்சிகளின் நிலைப்பாடு
- மனோ கணேசன்
வட மாகாணசபை தேர்தலின் போது பொதுநலவாய நாடுகளின் அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். அதேபோல் இன்று வட மாகாணத்தில் ஆளுநராக பணியாற்றும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திரசிறி அகற்றப்பட்டு, அவ்விடத்தில் சிவில் நபர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும். இவை எதிர்கட்சிகளின் கோரிக்கை. இவை சம்பந்தமாக எதிர்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதன் நிமித்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை எதிரணி தலைவர்கள் தேர்தல் ஆணையாளரை நேரில் சந்திக்க உள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, இன்று வட மாகாணத்துக்கு போலிஸ் அதிகாரங்கள் தேவை இல்லை என்று சொல்லும் நபர்கள் யார்? விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் இது தொடர்பில் முன்னணியில் உள்ளார்கள். இவர்கள்தான் இந்த நாட்டில் இன்று சுயாதீன போலிஸ் ஆணைக்குழுவை இல்லாமல் செய்தவர்கள். இந்த நாட்டில் சுயாதீன போலிஸ் ஆணைக்குழு இருந்திருந்தால், மாகாணத்தில் மட்டும் அல்ல, மத்திய அரசாங்கத்திலும் போலிஸ் அதிகாரங்களை பற்றி கவலைப்பட்டிருக்க தேவை இல்லை. (மேலும்) 13.06.13
___________________________________________________________________________________________________________
துருக்கியில் இடம்பெறும் போராட்டங்கள்
பூங்காவில் பூத்த புரட்சி...
- By சு. வெங்கடேஸ்வரன்
புவியியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஐரோப்பிய - ஆசிய அடையாளங்களை ஒருங்கே கொண்டுள்ள நாடு துருக்கி. இரு கண்டங்களுக்கு இடையே பரந்து இருப்பதால் கிழக்கத்திய கலாசாரம், மேற்கத்திய நாகரிகம், கம்யூனிஸ வர்க்கப் போராட்டம், சிறுபான்மையினப் பிரச்னை, தாராளமயமாக்கல், முதலாளித்துவம், இஸ்லாமிய மதம் என வேறுபட்ட பல்வேறு உலகங்களை உள்ளடக்கிய "மதச்சார்பற்ற நாடாக' துருக்கி உள்ளது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிர அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் உலகின் கவனத்தை அதன் பக்கம் திருப்பியுள்ளது. இஸ்தான்புல் நகரில் உள்ள பூங்காவை அழித்து வணிக வளாகம் கட்டுவதற்கான அரசின் முயற்சிக்கு எதிரான சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆர்ப்பாட்டத்தில் தொடங்கிய எதிர்ப்பு, இப்போது நாடு முழுவதுமான மக்கள் போராட்டமாக மாற வழிவகுத்துள்ளது. பூங்காவில் அமர்ந்து போராடிய குழு மீது அரசு மேற்கொண்ட அடக்குமுறை, அதுவரை அமைதி காத்துவந்த மக்களின் கோபத்தைத் தூண்டுவதாக அமைந்தது. தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு என அடக்குமுறைகள் தொடர்ந்தாலும், வீதியில் இறங்கி போராடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இஸ்தான்புல்லின் தாஸ்கிம் சதுக்கம் ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்தின் மையக்களமானது. (மேலும்) 13.06.13
___________________________________________________________________________________________________________
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 10 பேர் காத்தான்குடியில் கைது
அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்வதற்கு தயாராகவிருந்த 10 இளைஞர்களை காத்தான்குடி பொலிஸார் இன்று புதன்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர். இவர்களுடன் இவர்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்கு தயார்படுத்திய காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 20 தொடக்கம் 35 வயதுக்கும் உட்பட்ட ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காத்தான்குடி கடற்கரை ஓரத்திலுள்ள வீடொன்றில் பயணத்துக்கு ஆயத்தமாக தங்கியிருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
___________________________________________________________________________________________________________
உலகின் மிக வயதான மனிதர் 116 வயதில் காலமானார்
உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ஜப்பானைச் சேர்ந்த 116 வயது முதியவர் புதன்கிழமை காலமானார். ஜப்பானில் கடந்த 1897இல் பிறந்தவர் ஜிரோமோன் கிமூரா. கடந்த ஆண்டு (2012) டிசம்பரில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மூதாட்டி 115 வயதில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உலகின் வயதான நபர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் கிமூரா இடம் பிடித்தார். அப்போது, 115 வயதையும் தாண்டி 253 நாள்கள் வாழ்ந்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். கியோடாங்கோ நகரைச் சேர்ந்த அவர் கடந்த மாதம் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் கிமூரா புதன்கிழமை அதிகாலையில் இறந்ததாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிமூரா தனது 116ஆவது பிறந்த நாளைக் கடந்த ஏப்ரல் மாதம் கொண்டாடினார். அப்போது, அவருக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வாழ்த்து தெரிவித்தார். கிமூராவுக்கு 7 குழந்தைகளும், 14 பேரக் குழந்தைகளும், 25 கொள்ளுப்பேரக் குழந்தைகளும் உள்ளனர். அவர் ஜப்பான் அரசின் அஞ்சல் துறையில் 40 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு, விவசாயம் மற்றும் பண்ணைத்தொழிலில் ஈடுபட்ட அவர் 90 வயது வரை அதைக் கவனித்து வந்தார். கிமூராவுக்கு புகைப் பிடிக்கும் பழக்கம் கிடையாது. குறைவாகச் சாப்பிட்டு, நீண்ட காலம் வாழ்வதே அவரது கொள்கையாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மறைந்த கிமூராவுக்கு அவர் வாழ்ந்து வந்த கியோடாங்கோ நகரின் மேயர் அஞ்சலி செலுத்த உள்ளார். கிமூராவின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. 60 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட கியோடாங்கோ நகரில் கிமூரா தவிர மேலும் 94 பேர் 100 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
___________________________________________________________________________________________________________
13யை நீக்குவதில் அரசு தோற்றுவிட்டது: விமல்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருந்தும் 13 ஆவது திருத்தத்தை நீக்குவதிலிருந்து தோற்றுவிட்டது என்று அமைச்சர் விமல் வீரவங்ச சுட்டிக்காட்டினார். 13 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அரசாங்கத்திலுள்ள இடதுசாரிகள்;, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த்தேசிக்கூட்டமைப்பு எதிர்ப்பினை வெளிக்காட்டிவருக்கின்றன. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். மாகாண சபை முறைமையிலிருந்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிடுமாறு தேசிய சுதந்திர முன்னணியினால் நாடளாவிய ரீதியில் திரட்டப்பட்ட கையெழுத்து மகஜரை மாவட்ட அமைப்பாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டதன் பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக திரட்டப்பட்ட கையெழுத்து மகஜரை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக வைத்து அமைச்சர் இன்று புதன்கிழமை பெற்றுக்கொண்டார். (மேலும்) 13.06.13
___________________________________________________________________________________________________________
ஜேர்மன் நாடாளுமன்றம் / Deutscher Bundestag (2)
- ஜேர்மன் சட்டங்கள் (Gesetze)...
- யோ
புதிதாக முன்மொழியப்பட்ட அல்லது மாற்றம் செய்வதற்கு முன்மொழியப்பட்ட சட்டத்தைப் பற்றிய ஆலோசனைக் குழுவினரின் (Ausschuss) முடிவு நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டபின்னர் இந்த முடிவு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்றத்தில் இரண்டு தடவைகள் வாசித்துக் காட்டப்படும். பின்னர் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் பல மணித்தியாலங்கள் இதுபற்றி அலசி ஆராய்வார்கள். ஒத்த கருத்தையுடைய குழுவை பிரதினித்துவப் படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தமது கருத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்து உரையாற்றுவதற்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படும். புதிய சட்டம் அல்லது மாற்றம் செய்யப்படவேண்டிய சட்டம்பற்றி சகல நாடாளுமண்ற உறுப்பினர்களும் தமது கருத்துக்களை தெரிவித்த பின்னர் அதுபற்றி வாக்கெடுப்பில் பங்குபற்றுவதற்கு அவர்கள் அழைக்கப்படுவார்கள். நாடாளுமன்றத்தின் தலைவர் (Bundestagsprயூsident) இவ் வாக்கெடுப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் (இலங்கையில் இவர் சபானாயகர் என அழைக்கப்படுகிறார்). தற்போதய நாடாளுமன்ற தலைவர் "கலாநிதி. நோபேர்ட் லம்மேர்ட் (Dr. Nobert Lammbert)" ஆவார். கூட்ட மண்டபம் முழுவதையும் தன் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டுமென்பதனால், நாடளுமன்ற தலைவரின் இருக்கை எல்லோர் இருக்கையையும் விட உயரமான இடத்தில் இருக்கும். (மேலும்) 12.06.13
___________________________________________________________________________________________________________
கடந்த 28.05 2013 அன்று இடம்பெற்ற விபத்து தொடர்பாக எனது நண்பி செலீனா பீரிஸ் அவர்களினால் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சலுக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பதிலின் தமிழ் வடிவம் இங்கு தரப்படுகிறது.
இத்தகையதொரு பொறுப்பு கூறும் தன்மைக்கு முதலில் செயலாளர் அவர்களுக்கு இந்நாட்டின் பிரஜை என்ற வகையில் நன்றிகளை தரிவித்துக்கொள்வதுடன் இது தொடர்பில் மேலும் தொடர்ந்த கவனத்தில் உள்ளதுடன் நீங்களும் அவ்வாறே இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன்.
செலீனா பீரிஸ் LLB (Hull) LLM (London) MAIS (Vienna)
செயலாளர் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பதில்
செல்வி. செலீனா பீரிஸ் அர்களுக்கு,
28.05.2013 அன்று உங்களின் முன்னால் விபத்துக்குள்ளாகி தங்களின் மனிதாபிமானத்தின் மூலம் கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட விபத்துக்குள்ளான பயிற்சி தாதி சம்பந்தமான தங்களின் மின்னஞ்சல் தகவல் தொடர்பாக,சுகாதார அமைச்சின் செயலாளர் என்ற வகையில், முதலில், இக்காலத்தில் இத்தகைய செயற்பாடுகளில் இருந்து மக்கள் விலகியிருக்கின்ற நிலையில் நீங்கள் உடனடியாக செயற்பட்டு விபத்துக்குள்ளானவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்த்தமைக்காகவும் இரண்டாவதாக இச் சம்பவம் தொடர்பான புகைப்படத்துடன் எனது கவனத்திற்கு கொண்டு வந்தமைக்காகவும் தங்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். (மேலும்) 13.06.13
___________________________________________________________________________________________________________
வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெறாது இது வெறும் கண்துடைப்பு : சிறிதுங்க ஜயசூரிய
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் வழமையாக செயற்படுவதைப்போன்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதென சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தாது. இது வெறும் கண்துடைப்பு ஆகும். ஏனைய மாகாணங்களில் இடம்பெற்ற தேர்தலைப் போன்று வடக்குத் தேர்தலையும் நடத்துமாறும் அவ்வாறில்லாது போனால் எமது நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும் எனக் கோரி அரசாங்கத்திற்கு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. கடந்த 25 வருட காலமாக அமுலில் உள்ள மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்குமாறு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் கூக்குரல் போடுகின்றனர். இவர்களை வைத்தியசாலைக்கோ அல்லது அங்கொடைக்கோ அனுப்பி வைக்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் பொய், இலஞ்ச ஊழல் மற்றும் வஞ்சகம் நிறைந்துள்ளது. அதனை அனைத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
___________________________________________________________________________________________________________
எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு... நவீன குறுங்காவியம்
- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
க லாபூஷணம் பாலமுனை பாறூக்கின் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு... என்ற நவீன குறுங்காவிய நூல் அண்மையில் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் 88 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே பதம் (1987) கவிதைத் தொகுதி, சந்தனப் பொய்கை (2009) கவிதைத் தொகுதி, கொந்தளிப்பு (2010) குறுங்காவியம், தோட்டுப்பாய் மூத்தம்மா (2011) குறுங்காவியம் ஆகிய நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இலங்கை அரச சாஹித்திய மண்டல சான்றிதழ் பெற்ற நூல் கொந்தளிப்பு குறுங்காவியம் ஆகும். அதுபோல் இலங்கை அரச சாஹித்திய மண்டல விருது, கொடகே சாஹித்திய மகாகவி உருத்திரமூர்த்தி விருது, இலங்கை இலக்கியப் பேரவை (யாழ்ப்பாணம்) சான்றிதழ் ஆகியவந்றை தனதாக்கிக் கொண்ட நூல் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியம் ஆகும். இனவாதிகளின் வெறியாட்டத்தில் எதுவும் தெரியாமல் மாட்டிக்கொண்டு பலியாகிப்போன அப்பாவிகளுக்கே எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு.. என்ற இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் காரணமாக முஸ்லிம் தமிழ் இனங்களுக்கிடையே இருந்த உறவுநிலை, அதனால் ஏற்பட்ட விரிசல், மனமுறிவுகள், இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு, இடர்பாடுகள், விளைவுகள், ஒற்றுமை வாழ்வுக்கான சமாதான முயற்சி போன்றவற்றைப் பற்றிப் பேசுவதாகவே இந்த நூல் அமைந்திருக்கிறது. (மேலும்) 13.06.13
___________________________________________________________________________________________________________
இலங்கையர் ஒருமைப்பாட்டு மையத்தின் நிகழ்ச்சி பற்றிய முன் அறிவிப்பு
"வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவு"
இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவை யொட்டிய நிகழ்வை எதிர்வரும் யூலை மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாரிஸில் நிகழ்த்த உள்ளது.
இந்நிகழ்வில் வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் நினைவுகள், அரசியற் காரணங்களால் விசாரணை இன்றி சிறை வைக்கப்பட்டிருப்பவர்களின் நிலமைகள், மற்றும் இன்றைய இலங்கை அரசியல் குறித்த உரைகளும் இடம்பெறவுள்ளன.
நிகழ்ச்சி நிரல் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு : 10 rue Labat, 75018 Paris / Tளூl: +33 (0) 7 51 41 33 05 / centre.solidarite.srilankais@gmail.com facebook : Centre De Solidarite Des Srilankais http://srilankais.blogspot.fr
___________________________________________________________________________________________________________
இலங்கையில் ‘துக்ளக் - 9
தமிழர்களை திருப்திபடுத்தாத இலங்கை அரசு!
பெட்டிச் செய்திகள் 1
‘உதயன்’ மீது தொடரும் தாக்குதல்கள்!
புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பு நாளிதழான ‘உதயன்’ மீது தாக்குதல் நடப்பது இலங்கையில் வாடிக்கையாக உள்ளது. அடிக்கடி இந்த நாளிதழின் அலுவலகம், அச்சுக்கூடம், விநியோகஸ்தர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நாளிதழைக் கொளுத்தும் போராட்டமும் அவ்வப்போது நடந்து வருகிறது. “உதயன் நாளிதழ் மீது இதுவரை சுமார் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுகுறித்து ஒவ்வொரு முறையும் போலீஸில் புகார் தருகிறோம். ஆனால், அரசு இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. எனவே இந்தத் தாக்குதல்கள் அரசு ஒத்துழைப்புடனே நடப்பதாகச் சந்தேகிக்க வேண்டியுள்ளது” என்று எங்களிடம் குறிப்பிட்டார் அந்தப் பத்திரிகையின் உரிமையாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யுமான சரவணபவன். ஒவ்வொரு முறை, உதயன் மீது தாக்குதல் நடக்கும்போதும், ‘இது சிங்கள வெறியர்களின் செயல். ராணுவத்தினரின் செயல்’ என்றே ‘உதயன்’ குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், அங்கிருக்கும் சிலர் அதை மறுக்கிறார்கள். “கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும் சிங்களர்கள் வந்து தாக்குதல் நடத்த வாய்ப்புக் குறைவு. இந்தத் தாக்குதல்கள் தமிழர்களாலேயே நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம். காரணம் - ‘உதயன்’ பத்திரிகை ஆதாரம் ஏதுமில்லாமல், வரம்பு மீறி ஆளுங் கட்சிக் கூட்டணித் தலைவர்களை விமர்சனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. (மேலும்) 12.06.13
___________________________________________________________________________________________________________
பயணியின் பார்வையில் 20
மூத்த பத்திரிகையாளர் கோபுவுடன் சில மணிநேரங்கள்
- முருகபூபதி
கிழக்குமாகாணத்தில் மழை, வெள்ளம் எனத்தெரிந்துகொண்டே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு எனது பயணத்தை தொடர்ந்தேன். திருகோணமலையில் இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு மட்டக்களப்பிலும் வவுனியாவிலும் பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஸ்தாபகர் கணேஷ். ஏற்கனவே எமது கல்வி நிதியம், வவுனியாவில் படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளை (மாணவர்களை) விடுவித்து அவர்களை க.பொ.த. உயர்தர சாதாரணதர பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு வகைசெய்தபோது அந்தப்பணியை நிறைவுசெய்வதற்கு குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் வவுனியா கிளையே ஒத்துழைப்பு வழங்கியது. திருகோணமலை, மட்டக்களப்பில் பல மாணவர்களுக்கு மாத்திரமன்றி கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் பல மாணவர்களுக்கும் மேற்குறித்த தன்னார்வ அமைப்பின் ஊடாகவே எமது நிதியம் உதவிவருகிறது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ரவீந்திரநாத் காணாமல் போனதையடுத்து அங்கு பணியிலிருந்த துணைவேந்தர்கள், மற்றும் மாணவர் நலன்பேண் அலுவலர்கள் குறிப்பிட்ட உதவிபெறும் மாணவர்களின் கண்காணிப்பாளர்களாக பணியாற்றிவந்தார்கள். கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் நிதியம் ஊடாகவே எமது கல்வி நிதியம் நிதிக்கொடுப்பனவுகளை அனுப்பி மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கச்செய்தது. .(மேலும்) 12.06.13
___________________________________________________________________________________________________________
கபடமும் வஞ்சகமும்
- ஸ்ரீதரன்-சுகு
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டமூலத்திற்கு மரணச் சடங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 13வது திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரப் பரவலாக்கல் ஆரம்பித்த நாளிலிருந்து அதனை கால்தடம் போட்டு வீழ்த்துவதற்கு நடத்தப்பட்ட முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதுவொரு இழிவான வரலாறு. 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் ஒரு அதிகார பரலாக்கல் கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஈ.பி.ஆர்.எல். இன் பங்களிப்பு குறிப்பிடப்பட வேண்டியது. இதனை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கு அன்றைய ஐ.தே.க ஆட்சியாளர்கள் குறிப்பாக பிரேமதாசா- அரசு புலிகள் - ஜே.வி.பி எல்லோருடைய எதிர்ப்புக்கும் அப்பால் ஆட்சி கட்டமைப்பை நிர்மாணிக்க வேண்டியிருந்தது. அதிகாரப்பரலாக்கலுக்கு எதிராக சிங்கள தரப்பாலும், தமிழ் தரப்பாலும் நடத்தப்பட்ட கூத்துக்கள் புத்தி- தூரதிருஷ்டியின்மை இங்கு பதிவு செய்யப்படல் வேண்டும். மரணங்கள், சேதங்கள் ,வன்மமும் ,குரோதமும் நிறைந்த ஆவேச கூச்சல்களுக்கு நடுவில்தான் வடக்கு கிழக்கு மாகாண அரசாங்கத்தை தாபிக்க வேண்டியிருந்தது. ஆனால் 13வது திருத்தத்தின் கீழான அதிகாரங்களை அனுமதிப்பதற்கு பிரேமதாசா அரசு மனப்படவில்லை. 13வது திருத்தத்தில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு அதிகாரத்திற்காகவும் போராட வேண்டியிருந்தது. இந்திய அமைதிப்படை பிரசன்னமான நிலையிலேயே பெரும் சவால்கள் பிரச்சனைகள் மத்தியில் மாகாண அரசை நகர்த்த வேண்டியிருந்தது. (மேலும்) 12.06.13
___________________________________________________________________________________________________________
திருத்த சட்டமூலத்தை தெரிவுக்குழுவுக்கு அனுப்பவும்:ஈ.பி.டி.பி
13 ஆவது திருத்தத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. அவ்வாறு அனுப்பினால் இந்த சட்டமூலம் பற்றி அரசியல் கட்சி பிரதிநிதிகள் தமது கருத்துகளை தெரிவிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதன் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இதனைப்பற்றி ஆராய்வதற்கு குழுவொன்றை நியமித்தது. இந்த சட்டமூலத்தை ஆராய்வதற்கு நீண்ட காலம் தேவையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பாதுவிடின் அது பல சந்தேகங்களுக்கு இடமளிக்கும்; என்று அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதேநேரம், இந்த சட்டமூலத்திற்கான எதிர்ப்பை ஸ்ரீலங்கா முஸ்லாம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஹசன் அலி தெரிவிக்கையில், இது பற்றி ஜனாதிபதிக்கு எழுதவுள்ளோம், இந்த சட்டமூலத்தை எதிர்க்கவிருக்கின்றோம் இது அதிகாரங்களை குவிக்க வழிசெய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
___________________________________________________________________________________________________________
13ஆவது திருத்த சட்டத்தை ஒழிக்க எடுக்கும் முயற்சி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகுக்காது -த.தே.கூ.
13ஆம் திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கு எடுக்கும் முயற்சியானது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகுக்காது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிந்தவுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்தும் பொருட்டு 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குவேன் என ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் இன்று அத் திருத்தத்தை ஒழிப்பதற்கும் அதை திருத்துவதற்கும் எடுக்கப்படுகின்ற முயற்சியானது இனப்பிரச்சினைக்கு தீர்வு எதுவும் வழங்கப்படமாட்டாது என்பதையே காட்டுகின்றது. இதனால் 13ஆவது திருத்த யோசனைகள் தொடர்பில் முன் வைக்கப்பட்டுள்ள பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது இதை நாம் எதிர்க்கின்றோம். இந்த திருத்த பிரேரணைக்கும் அரசாங்கத்திலுள்ள இடது சாரி கட்சிகளின் அமைச்சர்களும் மற்றும் சில அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பிரேரணையை எடுக்கக் கூடாது என்பதாகவும் கூறியுள்ளனர். யுத்தம் முடிந்தவுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கூறப்பட்ட எதுவும் இன்று நிறைவேற்றப்படவில்லை. தற்போது வேறு வகையான கருத்துக்களே கூறப்படுகின்றன. இதனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு இவர்களினால் வழங்கப்படமாட்டாது என்பதை விளக்கமுடிகின்றது என்றார்.
___________________________________________________________________________________________________________
பகிடிவதையை எதிர்த்த தேரர் மீது தாக்குதல்; 17 பிக்கு மாணவர்கள் கைது
பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாத்தறை சுதர்ஷி பிரிவெனா உயர்க்கல்லூரி தேரர் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் அதே கல்லூரியைச் சேர்ந்த பிக்கு மாணவர்கள் 17பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த தேரரை, அவர்கள் காலால் உதைத்து குடையினால் தாக்கினார்கள் என்று மாத்தறை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான அக்குரஸ்ஸ தம்மபால தேரர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
___________________________________________________________________________________________________________
புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சென்ற படகு மூழ்கியதாக அஞ்சப்படுகிறது
புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த மற்றுமொரு படகு அவுஸ்திரேலியாவுக்கு அப்பால் மூழ்கியுள்ளதாக அஞ்சப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து காணாமல் போன இப்படகை அதிகாரிகள் நேற்றிலிருந்து தேடி வருகின்றனர். இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையேயான கடற்பரப்பில் கொக்கோஸ் தீவுக்கு அப்பால் 2 விமானங்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்படுவதாக அவுஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகாரசபை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. கொக்கோஸ் தீவுக்கு வடக்கே 260 கடல் மைல் தொலைவில் இப்படகு காணப்பட்டதாக நம்பப்படுகின்றது. இப்படகில் எத்தனை பேர் பயணித்துள்ளனரென்பது தொடர்பில் தெரியவரவில்லை. கடந்த வாரம் கிறிஸ்மஸ் தீவுக்கு அப்பால் படகொன்று மூழ்கியதில் குறைந்தபட்சம் 55 ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் உயிரிழந்திருந்தனர்.
___________________________________________________________________________________________________________
போலி ஆவணம் சமர்ப்பித்து அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்த குற்றச்சாட்டு; 8 வருடத்தின் பின் பெண் விடுதலை
போலி ஆவணத்தை சமர்ப்பித்து அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணொருவர் 8 வருடங்களின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தெரியவருவதாவது:யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஜெயகாந்தா தனது கணவருக்கும் தனக்கும் தங்களது மூன்று பிள்ளைகளுக்கும் 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க விசாவிற்கான விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை கையளித்துள்ளார். விசாவிற்காக கையளிக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலனை செய்த அமெரிக்க தூதரகத்தின் கொன்சுலர் விசாரணை அதிகாரி பிரசன்னா கம்மம்பில விசா விண்ணப்பதாரியான ஆறுமுகம் ஜெயகாந்தாவினால் கையளிக்கப்பட்ட விண்ணப்பத்தில் ஜெயகாந்தாவின் பிறந்த திகதி 25-11-1959 என குறிப்பிடப் பட்டிருக்கையில் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்களில் தாயாரான ஆறுமுகம் ஜெயகாந்தாவின் பிறந்த திகதி 01-04-1960 எனக் குறிப்பிடப்பட்டிருந்ததை அவதானித்தையடுத்து கொழும்பு மோசடிப்பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து ஆறுமுகம் ஜெயகாந்தாவை கைது செய்த பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். (மேலும்) 12.06.13
___________________________________________________________________________________________________________
சுயநிர்ணய உரிமை - தொடரும் விவாதங்கள்
டி.கே. ரங்கராஜன்
ஆப்ரஹாம் லிங்கன், ""எந்த ஒரு நாடும் தானாகவே தன்னை துண்டாடிக் கொள்கிற வாய்ப்பை உருவாக்காது'' எனக் குறிப்பிட்டார். ஆம் அது முதலாளித்துவ அரசோ அல்லது கம்யூனிஸ்டுகள் தலைமையிலான அரசோ எதுவானாலும், தன்னிடம் உள்ள ஒரு பகுதி இன்றைய உலகச் சூழலில் பிரிந்து செல்வதை ஒருபோதும் அனுமதிக்காது. இன்றைய யதார்த்தத்தில் அப்படிப் பிரித்துக் கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பதும், பொருத்தமாக இருக்காது.
இலங்கைத் தமிழர் பிரச்னை, இந்த நூற்றாண்டின் பெரும் துயரம்' என்பது வேதனையான உண்மை. அதிகாரம், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை, சிங்கள மேலாதிக்க ஆட்சியாளர்களால், இலங்கையின் பாரம்பரியத் தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டது. இந்த அடிப்படை உரிமைகளுக்காக, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அமைதி வழியில் போராடியவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலை உருவானதற்கு சிங்கள மேலாதிக்கம்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. 2009-இல் ஏற்பட்ட மிகப்பெரிய நாசத்திற்குப் பின் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தங்களின் உரிமைகளை நிலைநாட்டிடவும், வாழ்க்கைத் தேவைகளுக்காகவும் இன்றும் இலங்கைத் தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். "சமரசம் என்பது ஒரு தவறான சொல்' என்று கருதலாகாது என விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் குறிப்பிட்டார். இந்த அணுகுமுறையை புலிகள் இயக்கத்தினரும் பின்பற்றி இருக்கலாமோ என்ற கருத்தைப் பலர் வெளிப்படுத்தி இருப்பது தமிழ்ச் சமூகம் நன்கு அறிந்த ஒன்று. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் உருவாக இருந்த பல சமரசத் தீர்வுகள் தட்டி விடப்பட்டது உண்மை என்பதை மறைக்க முடியாது. அதுவும் இன்று நீடித்து நிற்கும் துயரத்திற்குக் காரணமாகும். .(மேலும்) 11.06.13
___________________________________________________________________________________________________________
அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (5)
எஸ்.எம்.எம்.பஷீர்
உண்மை அமெரிக்காவின் தேச விரோதி!
“யார் எவர் என்ற வேறுபாடில்லாமல் மக்கள் உண்மையைக் காண வேண்டும் , ஏனெனில் தகவல்கள் இன்றி பொதுமக்கள் விபரமறிந்த முடிவுகளை மேற்கொள்ள முடியாது “
- பிராட்லி எட்வர்ட் மான்னிங் (Bradley Edward Manning)
அமெரிக்காவின் அந்தரங்கங்களை அகிலத்துக்கு எடுத்துக்காட்டி உலகம் தழுவிய ஒரு பொது விவாதத் தளத்தை , கலந்துரையாடலை ஏற்படுத்தப் போவதாக நம்பியே கேபிள் (கம்பி வடம்) செய்திகளை வெளிக் கொண்டு வந்தார் பிராட்லி மான்னிங் . அமரிக்காவின் இராணுவ பிரிவில் ஒரு பனி ஆணையற்ற இராணுவ புலனாய்வு தொகுப்பாளராக கணனித் தகவற் தொழிநுட்ப பகுதியில் இராக்கில் பணியாற்றிய பொழுது பிராட்லி மான்னிங் அமெரிக்காவின் ஜனநாயகம் , மனிதத்துவம் பற்றிய பொய் முகத்தினை , தனது கைகளையும் கண்களையும் தாண்டிச் செல்லும் செய்திகளை கண்டு மன உளைச்சலுக்கு மனச்சாட்சி உறுத்தலுக்கு உட்பட்டார். உண்மைகளை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்; உண்மைகள் என்பவை அமெரிக்காவும் வெளியுலக பிரபல சர்வதேச ஊடகங்களும் சொல்லும் செய்திகள் அல்ல , அவ்வூடகச் செய்திகளால் மக்கள் மனதில் கட்டமைக்கப்பட்ட சிந்தனைகள் , பதியப்பட்ட கருத்தோட்டங்கள் என்பவற்றின் அடிப்படையில் அவர்களால் எடுக்கப்படும் முடிவுகள் அல்ல என்பதை ஜூலியன் அசாஞ்சே நடத்தும் விக்லீக்கிசில் வெளியான கேபிள் செய்திகள் உணரப் பண்ணின. இன்றைய தொழிநுட்ப யுகத்தில் பாரிய சென்றடைவினைக் கொண்ட இணையத்தினூடாக உலகின் பல அரசுகளின் அந்தரங்கங்களை அம்பலத்துக்கு கொண்டு வந்தது விக்கிலீக்ஸ் .(மேலும்) 11.06.13
___________________________________________________________________________________________________________
மாகாணசபை முறையில் கைவைக்கும் உரிமை இந்தியா மற்றும் இலங்கைக்கு கிடையாது
- தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி
'மாகாணசபைத் தேர்தல் முறைமையானது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல் தெரியாத தேரர்களினால் மாத்திரமன்றி இதில் கைவைக்கும் உரிமை இந்தியா மற்றும் இலங்கைக்கு கூட கிடையாது' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்தார். 'இந்த நாட்டில் சிறுபான்மையினர் இல்லை என்று அரசாங்கம் சொல்லி வருகின்றது. அவ்வாறு சிறுபான்மை இனத்தினர் இல்லை என்ற உணர்வை அரசாங்கமே தனது நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நேற்று திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த நாட்டில் இருபது வருடங்களாகவே ஜனநாயகம் இல்லை. காசு கொடுத்து அனைவரையும் அழைத்துவந்து மூன்றில் இரண்டைக் காட்டி ஆட்சி நடத்துப்படுகின்றது இந்த அரசாங்கம். ஆனால், ஜனாதிபதியிடம் கூறியுள்ளேன், நாட்டை உம்மிடம் தந்துள்ளதே தவிர உம் சீடர்களிடம் தரவில்லை. நாட்டை நீர் பாதுகாக்க வேண்டுமே தவிர உமது சீடர்கள் பாதுகாக்க கூடாது. நாட்டை உம் சீடர்கள் அழிக்கின்றார்கள்' என்று கூறியதாக அவர் சுட்டிக் காட்டினார். .(மேலும்) 11.06.13
___________________________________________________________________________________________________________
ஜேர்மன் நாடாளுமன்றம் (1)
- யோ
ஜேர்மன் நாடாளுமன்றம் "புன்டஸ்ராக் (Bundestag)" என்ற பெயரால் அழைக்கப்படும். ஜேர்மன் நாடாளுமன்றத்திற்கு ஆண்களும் பெண்களுமாக 620 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களே ஜேர்மன் சட்டங்கள் ஆக்கப்படுவதற்கு பொறுப்பானவர்களாவார்கள். 18 வயதிற்கு மேற்பட்ட ஜேர்மன் பிரஜைகள் எல்லோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் உரிமையைப் பெறுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 வருடங்களுக்கு ஒருமுறை மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள். இதனை “நாடாளுமன்ற தேர்தல் (Bundestagwahl)” என அழைப்பர். கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் இவ் வருடம் அதாவது 2013 இல் நடைபெறவுள்ளது. நாடாளு மன்றத்தின் கூட்டங்களில் சகலரும் பார்வையாளராக பங்குபற்ற முடியும். ஜேர்மனில் ஒருவர் எவற்றை செய்யலாம் அல்லது எவற்றை செய்யமுடியாது என்பதுபற்றி ஜேர்மன் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. .(மேலும்) 11.06.13
___________________________________________________________________________________________________________
அத்வானி எழுதிய ராஜினாமா கடிதம்
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள ராஜினாமாக் கடிதத்தில், நான் எனது வாழ்நாள் முழுவதும் ஜனா சங் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிக்காகவே உழைத்துள்ளேன். அதில் நான் அடைந்த திருப்திக்கு முடிவே இல்லை. ஆனால், அண்மையில் கட்சியின் தற்போதைய நிலைமையோடு என்னால் ஒத்துப் போக முடியாது என்பதை நான் அறிந்து கொண்டேன். கட்சி போகும் பாதை எனது கருத்துக்கு மாறானது. டாக்டர் முகர்ஜி, பண்டிட் தீனதயாள்ஜி, நானாஜி, வாஜ்பேயிஜி ஆகிய தலைவர்களின் கொள்கைகளோடு உருவாக்கப்பட்ட கட்சியில் தற்போது அந்தக் கொள்கைகள் இல்லை. பாஜகவில் இருக்கும் பல தலைவர்கள், தங்கள் சொந்த நலனை முக்கியமாகக் கொண்டே செயல்படுகின்றனர். எனவே, பாஜகவின் தேசிய செயற்குழுவில் இருந்தும், நாடாளுமன்றக் குழுவில் இருந்தும், தேர்தல் குழுவில் இருந்தும் விலகிக் கொள்வதாக முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
___________________________________________________________________________________________________________
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையில் சிக்குண்ட மீனவர்கள் 40 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார தெரிவித்தார். மேலும் 31 பேர் வரையில் காணாமற்போயுள்ளதாகவும் இவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். காலநிலை மாற்றத்தின் காரணமாக 29 பேர் காணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
___________________________________________________________________________________________________________
பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் கைது
பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். அவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்றிரவு வாக்குமூலமொன்றை பெற்றுக்கொண்டதன் பின்னரே அவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார். பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாம் என்பவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கொலைச்சம்பவம் தொடர்பில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் அடங்களாக நான்கு பொலிஸாரும் இரண்டு சிவிலியன்களும் கடந்த 06 ஆம் திகதி வியாழக்கிழமை குற்றப்புலாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சிவிலியன்கள் இருவரும் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொம்பே பகுதியில் வைத்து கடந்த 22 ஆம் திகதி கடத்தப்பட்ட வர்த்தகர் பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து கொலைச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
___________________________________________________________________________________________________________
கர்ப்பிணி மனைவியை தோளில் சுமந்தபடி 40 கி.மீ., தூரம் நடந்த பழங்குடி இளைஞர்: மனதை நெகிழ வைத்த பாச போராட்டம்
கோட்டயம்:கேரளாவில், பழங்குடியின இளைஞர், பிரசவ வலியால் துடித்த, தன் மனைவியை காப்பாற்றுவதற்காக, பலத்த மழையில், 40 கி.மீ., தூரம், மனைவியை தோளில் சுமந்து வந்த சம்பவம், பரிதாபத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், அந்த இளைஞரால், மனைவியை மட்டுமே காப்பற்ற முடிந்தது. வயிற்றிலிருந்த, குழந்தையை காப்பற்ற முடியவில்லை. கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில், கொன்னி என்ற அடர்ந்த வனப் பகுதி உள்ளது. இங்கு, பழங்குடியின மக்கள், கணிசமாக வசிக்கின்றனர். வனப் பகுதியில் உள்ள தேனை எடுத்து, அதை, நகர்ப் பகுதிகளில் விற்பது தான், இவர்களது பிரதான தொழில். இதில், மிக குறைந்த வருவாயே கிடைக்கிறது. இதனால், வறுமையின் பிடியில், இவர்கள் சிக்கியுள்ளனர்.இந்த பகுதியைச் சேர்ந்த, அய்யப்பன் என்ற இளைஞருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த, சுதா என்ற பெண்ணுடன், கடந்தாண்டு திருமணம் நடந்தது. சுதா, ஏழு மாத கர்ப்பமாக இருந்தார். .(மேலும்) 11.06.13
___________________________________________________________________________________________________________
அமெரிக்காவின் தீவிர கண்காணிப்பு பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்
அமெரிக்காவின் தீவிரமாக கண்காணித்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இணையதளத்தைப் பயன்படுத்தி உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் பல்வேறு ரகசிய தகவல்களை சேகரிப்பது, இ-மெயில் விவரங்களை தெரிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை அமெரிக்க உளவு அமைப்புகள் மேற்கொண்டிருப்பது சமீபத்தில் வெளி உலகத்துக்கு தெரியவந்தது. இப்போது நாடுவாரியாக எந்தெந்த நாடுகளை அமெரிக்கா அதிகம் உளவு பார்த்து தகவல்களை சேகரித்துள்ளது என்ற விவரம் தெரியவந்துள்ளது. இதில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் மட்டும் 14 கோடி ரகசிய தகவல்களை அமெரிக்கா திரட்டியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான், ஜோர்டான் ஆகிய நாடுகளிடம் இருந்து அதிக தகவல்களை இணைய தளம் மூலம் அமெரிக்க உளவு அமைப்புகள் திருடியுள்ளனர். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் அரபு நாடுகள் இப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக எகிப்தை, அமெரிக்கா அதிகம் கண்காணித்துள்ளது. இப்பட்டியில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவில் இருந்து 6 கோடியே 30 லட்சம் முக்கிய தகவல்களை அமெரிக்கா ரகசியமாக சேகரித்துள்ளது. நாடுகளை எந்த அளவுக்கு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்பதை வண்ணங்கள் மூலம் அமெரிக்கா பிரித்து வைத்துள்ளது. இதில் பச்சை வண்ண குறியீடு கொடுக்கப்பட்டுள்ள நாடுகள் அதிகம் கண்காணிப்புக்கு உள்ளாகவில்லை. சிவப்பு நிறம் குறியீடு உள்ள நாடுகள் அதிகம் கண்காணிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவே மஞ்சள், ஆரஞ்சு நிற குறியீடுகளில் நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சிவப்புக்கு அடுத்தபடியாக உள்ள ஆரஞ்சு நிற எச்சரிக்கை குறியீட்டை அமெரிக்கா அளித்துள்ளது. இதனிடையே தங்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு செயல்களை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்க அரசு பல தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம்தான் அவரது சதிவேலை முறியடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார் என்றும், அமெரிக்காவில் பல நாசவேலைகள் இதனால்தான் முறியடிக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
___________________________________________________________________________________________________________
ஜெர்மனியில் வெள்ளப் பெருக்கு: 23 ஆயிரம் பேர் வெளியேற்றம்
ஜெர்மனியில் எல்பே நதியில் வெள்ளப் பெருக்கால் அணை உடைந்ததைத் தொடர்ந்து, அருகில் வசித்து வந்த சுமார் 23 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டின் சேக்சனி அன்ஹால்ட் மாகாணத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கன மழை காரணமாக எல்பே நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு அபாயக் கட்டத்தைத் தாண்டி வெள்ளம் ஓடுவதால் அந்த மாகாணத்தின் தலைநகர் மக்டேபர்கில் நிலைமை மோசமடைந்துள்ளது. மாகாணத்தின் மற்ற பகுதிகளும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. இந்நிலையில், எல்பே நதி தனது துணை நதியான சாலேயுடன் சந்திக்கும் இடத்தில் உள்ள ஓர் அணை ஞாயிற்றுக்கிழமை திடீரென்று உடைந்தது. இதனால் அணையில் இருந்த நீர் வெளியேறி அருகில் உள்ள கிராமங்களும், அகேன் என்ற நகரமும் வெள்ளக்காடாகி விட்டன. அங்கிருந்த மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ராணுவ ஹெலிகாப்டர்களையும், படகுகளையும் மீட்புப்படையினர் பயன்படுத்தினர். இதனிடையே, மக்டேபர்க் நகரைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 23 ஆயிரம் பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த நகரைச் சுற்றிலும் வெள்ளத் தடுப்புக்காக தற்காலிக சுவரை அமைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும், மீட்புப்படை ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள மின் நிலையத்துக்குள் வெள்ள நீர் புகாமல் அரண் அமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, நாட்டின் கிழக்குப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரங்களை ஜெர்மன் அதிபர் ஜோச்சிம் கௌக் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
___________________________________________________________________________________________________________
அமெரிக்க உளவு ரகசியங்கள் அம்பலமான வழி தெரியவந்தது!
அமெரிக்காவின் மிகவும் ரகசியமானதும் வெளியிடப்பட முடியாததுமான மிக நுணுக்கமான உலக கண்காணிப்பு செயற்திட்டத்தை அம்பலப்படுத்தியதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். கோடிக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் ஏனைய உலகளாவிய நாளாந்த தொடர்பாடல்களைக் கண்காணிக்கின்ற புலனாய்வு பொறிமுறை செயற்திட்டத்தையே அவர் அம்பலப்படுத்தியிருந்தார். அமெரிக்க உளவுத்துறையினர் அரச அதிகாரத்தை சீர்குலைத்து ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் த கார்டியன் நாளிதழின் இணையதளத்துக்கு அனுப்பியுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளார். மக்களின் அந்தரங்க வாழ்க்கையையும் இணையதள சுதந்திரம் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களையும் அழிப்பதற்கு தான் இடமளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிபர் ஒபாமா இவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஸ்நோவ்டென் விசனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகள் தன்மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்பார்கள் என்றும் தான் தற்போது ஹாங்காங்கில் இருப்பதாகவும் பேச்சு சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள எந்தவொரு நாட்டிலும் தஞ்சம் கோரவுள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அமெரிக்க நீதிவிசாரணைத் துறை அறிவித்துள்ளது.
___________________________________________________________________________________________________________
இலங்கையில் மலிஜ் அப்துல்லா என்ற பெயரில் பல்கலைக்கழகம் உருவாக இடமளிக்க மாட்டோம்: பொதுபலசேனா
இலங்கை பெளத்த சிங்கள ராஜ்ய நாடாக இருப்பதனால் இங்கு முஸ்லிம்களுக்கென்றொரு பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவின் உதவியுடன் உருவாகுவதை பொதுபலசேனா ஒரு போதும் அங்கீகரிக்கப் போவதில்லை. இந்நாட்டில் சிங்களம் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற போதும் தனியாக ஒரு இனத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் எந்தவொரு நிறுவனத்தையும் எமது அமைப்பு ஏற்றுக் கொள்ளாது என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார். பொதுபல சேனாவின் கிழக்கின் முதலாவது மாவட்ட மாநாடு நேற்று அம்பாறை நகரில் அம்பாறை பிரிவேனாவின் தலைவர் கிரிந்திவெல சோமரத்ன தேரர் தலைமையில் நடைபெற்றது. இம் மநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11 ஆம் திகதி செவ்வாய் காத்தான்குடியிலுள்ள ஹிஸ்புல்லா அரங்கில் முஸ்லீம்களுக்கான பல்கலைக்கழகம் உருவாகுவதற்கான சகல ஒப்பந்த நடவடிக்கைகளும் சவூதி அரேபியாவின் உதவியுடன் கைச்சாத்திட உள்ளமை நன்கு அறிந்த விடயமே இதற்காக நாப்பது ஏக்கர் காணிகள் ஒதுக்கப்பட்டு அப்புதிய பல்கலைக்கழகத்திற்கான பெயர் சவூதி அரேபியாவின் மன்னனின் மகனுடைய பெயர் அப்துல் மலிஜ் எனவும் வைக்கப்பட வேண்டும் என்ற நிலையிலேயே இப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட இருக்கின்றது. .(மேலும்) 11.06.13
___________________________________________________________________________________________________________
மன்னார் நீதிமன்றம், நீதவானை அச்சுறுத்திய விவகார வழக்குகள் ஒத்திவைப்பு
மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் மன்னார் முன்னாள் நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சனுக்கு தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுத்தமை ஆகிய விவகாரங்கள் தொடர்பான வழங்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இவ்விரு வழக்குகளும், மன்னார் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி இரு வழக்குகளையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கணகரட்னம் முன்னிலையில் இவ்விருவழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மன்னார் நீதிமன்றத்தின் மீது கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட 52 பேரும் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இந்நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அத்துடன், மன்னார் முன்னாள் நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சனுக்கு தொலைபேசியூடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதான வழக்கும் இன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் சந்தேகநபரான அமைச்சர் றிஸாட் பதீயுதீன், நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். குறித்த வழக்கினையும் செப்டெம்பர் 9 ஆம் திகதிக்கே நீதவான் உத்தரவிட்டார்.
___________________________________________________________________________________________________________
13வது திருத்தத்தை நீக்கும்படி ஜாதிக ஹெல உருமய கொண்டுவரப்போகும் மசோதாவை தோற்கடிப்பது மட்டுமே அரசாங்கத்தினுள்ளிருக்கும் பைத்தியக்கார தீவிரவாதிகளை தோற்கடிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு
- தயான் ஜயதிலகா
ஸ்ரீலங்காவின் ஒரு சகோதர நாடு யுகோஸ்சிலாவியா, கூட்டுச்சேரா நாடுகள் அமைப்பின் சக நிறுவனர்களில் ஒன்றாகிய அந்நாட்டின் தலைநகராக 1961ல் பெல்கிரேட் விளங்கியது. இப்போது யுகோஸ்சிலாவியா என்கிற நாடு இல்லை.அந்த நாடு உடைந்ததின் விளைவாக சங்கிலித் தொடர் போன்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அறிவு நுட்பமுடைய சோஷலிசவாதியான மார்ஷல் டிட்டோ பிரகடனப்படுத்தப்பட்டிருந்த யுகோஸ்சிலாவியா அரசியலமைப்பில் பல மாற்றங்களை செய்ததுடன், சுயாட்சி அதிகாரத்தை கொண்டிருந்த கொசோவா மாகாணத்தின் அதிகாரங்களில் கடுமையான குறைப்பை செய்தது மாத்திரமன்றி, அதை தொடர்ந்து 1990ல் கொசோவா சட்டப் பேரவையை கலைத்ததுடன் அந்த சங்கிலித் தொடர்மாற்றங்கள் ஆரம்பமாயின. அழிவை நோக்கிய செங்குத்தான ஒரு மலைச்சிகரத்தை நோக்கி வழிநடத்தும் அதே பாதையை ஸ்ரீலங்கா நிச்சயம் பின்பற்றக்கூடாது. நாடு தீர்மானம் மேற்கொள்ளவேண்டிய ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. ஜாதிக ஹெல உருமயவின் மசோதா பாராளுமன்றத்தில் வெற்றி பெறுவது, 1956ல் ஆரம்பிக்கப்பட்ட சிங்களம் மட்டும் மசோதாவில் ஆரம்பமாகி மற்றும் 1972ல் ஒரு மொழி, மற்றும் ஒரு மதம் என்கிற மேலாதிக்க தன்மையில் பாராட்டத்தக்க மாற்றமாக அமைந்த குடியரசு அரசியலமைப்பு காரணமாக மேலும் சிதைவடைந்துபோன எதிர்மறையான நடவடிக்கைகளை முற்றுப்பெற வைத்ததாக ஆகிவிடும். (மேலும்) 10.06.13
___________________________________________________________________________________________________________
சீரற்ற காலநிலையால் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் சுமார் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை இயற்கையின் சீற்றத்தால் 22 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 43 பேர் காணாமல் பேயுள்ளதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தொடர்மழை வீழ்ச்சி காரணமாக ஆறுகள் மற்றும் குளங்கள் ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் அப் பகுதிகளை அண்டி வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் மீன் பிடிக்காக கடலுக்குச் சென்ற 37 மீன் பிடிப் படகுகள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள மீன்பிடித்துறை அமைச்சு, அவற்றைத் தேடும் பணியில் கடற்படையினரும் விமானப்படையினரும் இணைந்து செயற்படுவதாக தெரிவித்துள்ளது.
___________________________________________________________________________________________________________
13 வது திருத்தசட்டத்தில் இருந்து தொடங்கி அதற்கு மேலதிக அதிகாரங்களை பெற்று எமது அரசியல் இலக்கை அடைவதே எமது கொள்கை.
டக்ளஸ் தேவானந்தா பதிலளிக்கிறார்
எம்மை பொறுத்தவரையில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தேர்தலில் போட்டியிட முன்வந்திருந்தாலே மாவிலை தோரணம் கட்டி வரவேற்றிருப்போம். அவ்வாறு முன்வந்திருந்தால் எமது மக்களுக்கு இத்தனை அவலங்கள் நடந்திருக்காது. அழிவு யுத்தத்தை நிறுத்தி வேலுப்பிளை பிரபாகரன் ஐனநாயக வழிக்கு வந்து சரியான தலைமையை எமது மக்களுக்கு வழங்குவாரேயானால் நான் மாற்று அரசியலை முன்னெடுக்கப்போவதில்லை என பகிகரங்கமாகவே பல தடவை கூறி வந்திருக்கிறேன். ஆனாலும் அவர்கள் அதை ஏற்கவில்லை. ஏற்க மறுத்ததின் விளைவுகளையும் நாம் கண்டு விட்டோம். புலிகள் இயக்கத்தில் இருந்து இறந்து போன உறுப்பினர்கள் எவரையும் நான் வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைத்தோ அல்லது அவருக்கு இறுதி வரை துணையாக இருந்த கே.பி, தமிழினி, அல்லது தாயாமாஸ்ரரை நினைத்தோ பார்க்கவில்லை. அவலங்களையும் இழப்புகளையும் தவிர எமது மக்களுக்கு எதையும் பெற்று தந்திராத அழிவு யுத்தத்திற்கு பல்லாயிரக்கணக்கான புலிகளின் உறுப்பினர்கள் பலிகொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் யாவரையும் எமது மக்களின் பிள்ளைகளாகவே நான் பார்க்கிறேன். ஐனநாயக வழிமுறைக்குள் வருவதென்று முன்னரே இவ்வாறு முடிவுகளை எடுத்திருந்தால் இந்த இழப்புகள் அன்றே தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்ற விமர்சனங்களை பிறர் போல் நானும் அவர்கள் மீது வைக்க விரும்பவில்லை. காலம் கடந்தாவது இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருப்பதை வரவேற்கிறேன். எம்முடன் இணைந்தோ அல்லது தனியாகவோ போட்டியிட யாருக்கும் உரிமை உண்டு. தீர்ப்பு வழங்குவது மக்களே. ஆயிரம் பூக்கள் மலரட்டும். வாழ்த்துகிறேன். (மேலும்) 10.06.13
___________________________________________________________________________________________________________
13-ஆவது சட்டத்திருத்தம் ரத்து: இலங்கையின் முயற்சியைத் தடுக்க வேண்டும்
- பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, திமுக தலைவர் கருணாநிதி கடிதம்
இலங்கையில் 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய முயற்சிப்பதை இந்தியா தடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது: ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் 1987-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையின் 13-ஆவது அரசியல் சாசனம் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது சிங்களத் தீவிரவாத குழுவான "ஜாதிக எல உறுமய' (சிங்களப் பெயர்) என்ற அமைப்பு 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் இடையே நல்லெண்ணம் மற்றும் நல்லுறவுக்கு வழிவகுக்கும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. (மேலும்) 10.06.13
___________________________________________________________________________________________________________
கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் தஞ்சக் கோரிக்கை சட்டங்கள்
சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோருவோர் தொடர்பான சட்ட விதிகளை கடுமையாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் பலத்த ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். தஞ்சக்கோரிக்கை தொடர்பான சட்டங்களில் கடந்த செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 80 வீதமான மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதாக ஆரம்பக்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய சட்டவிதிகளின்படி, இராணுவத்திலிருந்து தப்பிவருபவர்கள் இனிமேல் அங்கு தஞ்சம் கோரமுடியாது. அதேபோல, வெளிநாடுகளில் உள்ள சுவிஸ் தூதரகங்கள் ஊடாக இனிமேல் எவரும் தஞ்சம் கோரமுடியாதபடியும் சட்டத்திருத்தம் வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் குடியேற்றக் கொள்கைகளை எதிர்த்து அங்கு கடந்த ஆண்டில் நடந்த ஆர்ப்பாட்டமொன்று தஞ்சக் கோரிக்கை சட்டத்தில் கொண்டுரப்பட்ட சட்டத்திருத்தத்தை எதிர்த்து, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று மனித உரிமை அமைப்புகளும் இடதுசாரிகளும் நடத்திய கையெழுத்து வேட்டையின் பிரகாரமே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்தில் கடந்த பத்தாண்டுகளில் தஞ்சக் கோரிக்கைகள் அளவுகடந்து அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்த சட்டத்திருத்தம் தாய்நாடொன்றிலிருந்து தஞ்சம் கோரி விண்ணப்பிப்பவர்களைப் பாதிக்காது என்றும் மூன்றாவது நாடொன்றில் உள்ள சுவிஸ் தூதரகத்தினூடாக விண்ணப்பிப்பதையே தடுப்பதாகவும் சுவிட்சர்லாந்தின் லுத்செர்ன் மாநில சோசலிஸக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் லதன் சுந்தரலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். வெளிநாட்டவர்களின் குடியேற்றத்துக்கு எதிராக மேற்குலக நாடுகளில் அதிகரித்துவரும் அழுத்தங்களின் தொடர்ச்சியே சுவிட்சர்லாந்தின் கொள்கை மாற்றமும் என்றும் அவர் கூறினார்.
___________________________________________________________________________________________________________
தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவது அவசியம்: தயா மாஸ்டர்
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கு கொள்வது அவசியம் என்று முன்னாள் புலிகளின் ஊடகப் பொறுப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் 13 ஆவது திருத்தத்திலுள்ள காணி பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டுமா? இல்லையா என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளதெனவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் மூத்த அரசியல்வாதியும் அரசியல் பட்டறிவுள்ள இரா.சம்பந்தன் கருத்துக்களை முன்வைப்பது அவசியமாகும். நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்ட பின்னர் அது குறித்து பேசுவதால் எதுவித பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுவது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
___________________________________________________________________________________________________________
*அம்பாறையில் மாணவர்களுக்கு மாதாந்த நிதிக் கொடுப்பனவு.
அம்பாறை மாவட்டத்தில் வறியமாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நடவடிக்கையினை ஏடு(சர்வதேசம்) நிறுவனமும், முனைப்புநிறுவனமும் இணைந்து முன்னெடுக்கவுள்ளன. இதற்கான ஆரம்ப வேலைத்திட்டம் அண்மையில் ஏடுநிறுவனம் அம்பாறை மாவட்டத்தலைவி.திருமதி திலகவதி கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் திருநாவுக்கரசுநாயனார் குருகுலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது உதவிபெறும் 15மாணவர்களும் அவர்களது பாதுகாவலர்களும் கலந்துகொண்டதுடன், அதிதிகளாக பிரதேசசெயலகத்தின் சார்பில் திட்டமிடல் பணிப்பாபாளர் திரு.நவீரதன் கிராமசேவகர்களுக்குப் பொறுப்பான நிருவாகஉத்தியோகத்தர் ராஜரெத்தினம் அவர்களும். வலயக்கல்விஅலுவலகத்தின் சார்பில் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான திரு.நடராஜா,திரு.குணாளன் அவர்களும், பிரதேசகல்விப்பணிப்பாளர்களான திரு.தவராஜா அவர்களும்,திரு.ஜெயந்தன் அவர்களும் பிரதேச சுகாதரவைத்தியப்பணிமனை உத்தியோகத்தர்களும் பாடசாலைஅதிபர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (மேலும்) 10.06.13
___________________________________________________________________________________________________________
“எழுத்தாளர்கள்: பரிசுகள், விருதுகள், பாராட்டுகள்”
சென்னைப் பல்கலைக்கழக பவள விழாக் கலையரங்கில் 26.04.2013ல் நிகழ்ந்த விளக்கு விருது வழங்கும் வைபவத்தில் எம். ஏ. நுஃமான் ஆற்றிய ஏற்புரை
பரிசுகள் விருதுகள் பாராட்டுகள் எல்லாம் தமிழ்ச்சூழலில் மலினப்படுத்தப்பட்டிருப்பதுபோல் வேறு எங்கும் மலினப்படுத்தப்பட்டிருக்காது என்பது என் எண்ணம். பாராட்டு விழாக்களும் கௌரவிப்புகளும் அவற்றுக்குரிய அர்த்தத்தையும் மதிப்பையும் இழந்துவிட்டன. பொன்னாடைகள் பன்னாடைகளுக்குச் சமனாகிவிட்டன. அபத்தமான, அலங்காரமான பட்டங்கள் வழங்கப்படுவதும், அவற்றை நம்படைப்பாளிகள் பலர் ஆவலுடனும், ஆர்ப்பாட்டத்துடனும் சுமந்து திரிவதும் சுயமதிப்பீட்டின் வீழ்ச்சியையே நமக்கு உணர்த்துகின்றன. பரிசுகள், விருதுகளுக்காக நம் படைப்பாளிகள் பலர் படும் பாடுகளும், ஒவ்வொர முறையும் இவை தொடர்பாக எழும் சர்ச்சைகளும் இவற்றை மதிப்பிறக்கம் செய்துவிட்டன. இத்தகைய சூழலில் விருதுகள் எவையும் பெறாது இருப்பதே ஒரு எழுத்தாளனுக்குக் கௌரவம் என்ற கருத்து எனக்குள் உறுதியாகிவிட்டது. இந்த உறுதியுடனேயே, தவிர்க்க முடியாத இரண்டொரு சந்தர்ப்பங்களைத் தவிர, இவற்றை நான் புறக்கணித்துவந்திருக்கிறேன். இலங்கை அரசு வழங்கிய கலாசூரி விருது, கலாசார அமைச்சு விருது, வடகிழக்கு மாகாண கவர்னர் விருது ஆகியவற்றை இவ்வாறு நான் நிராகரித்திருக்கிறேன். இலக்கிய விழாக்களில் கௌரவிப்புக்கான அனேக அழைப்புகளை மறுதலித்திருக்கிறேன். அரச அல்லது தனியார் நிறுவனங்களின் பரிசுத் தேர்வுக்காக இதுவரை எனது நூல்கள் எவற்றையும் நான் அனுப்பியதில்லை. எனக்குள் ஒளித்து வாழும் எனது மனஅமைப்பும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லவேண்டும் . எனது முதலாவது நூல் தவிர வேறு எதற்கும் நான் வெளியீட்டு விழாக்கள் செய்ததில்லை. எனது எழுத்துக்கள் மூலமாக அன்றி வேறுவகையில் எனது இருப்பை வெளிக்காட்ட நான் முயன்றதில்லை. (மேலும்) 09.06.13
|