|
வரப்போகும் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் தமிழ் பேசும் மக்களுக்கு ஒர் அருமையான வாய்ப்பு!
- வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலும், பாராளுமன்றப் பொதுத்தேர்தலும் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருட முற்பகுதியிலோ நடைபெறும் என்பது பெரும்பாலும் நிச்சயமாகிவிட்டது. எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லையாயினும், தேர்தல்கள் விரைவில் நடைபெறப்போவது என்பது உறுதி. இந்த இரண்டு தேர்தல்களையும் எதிர்கொள்வதற்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இப்பொழுதே முனைப்பாக தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளதையும் காணமுடிகிறது. ஆளும் கட்சியைப் பொறுத்தவரையில், இரண்டு தேர்தல்களிலும் தாமே வெற்றியீட்டுவோம் என்ற திடமான நம்பிக்கை மேலோங்கி நிற்கிறது. அதற்கான காரணத்தை விளக்கத் தேவையில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை நாசமாக்கி வந்த ஒரு யுத்தத்தை, அதை நடாத்தி வந்த புலிகள் என்ற பாசிச பயங்கரவாத இயக்கத்தை, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க, ரணில் விக்கிரமசிங்க என அனைவலாலும் தீர்க்க முடியாமல் இருந்த ஒரு பிரச்சினையை, மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்துள்ளது. இலங்கை இராணுவத்தின் அர்ப்பணிப்புடன் கூடிய போராற்றல் யுத்தத்தின் வெற்றியைத் தீர்மானித்ததில் ஒரு முக்கிய பங்கை ஆற்றியிருந்த போதிலும், நாட்டின் உறுதியான அரசியல் தலைமைத்துவமே வெற்றியைத் தீர்மானித்த தீர்க்கமான சக்தியாக இருந்துள்ளது. ஏனெனில் இதே இலங்கை இராணுவம் என்ற ‘கத்தி’ முன்னைய காலங்களிலும் இருந்துள்ளது. ஆனால் அதை உரிய முறையில் தீட்டிப் பாவித்த வேலையை இன்றைய அரசாங்கமே சரியாகச் செய்துள்ளது. எனவே மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி, நடைபெறப்போகும் இரண்டு தேர்தல்களிலும் அமோக வெற்றியீட்டும் என்பது, பெரும்பாலும் நிச்சயிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். மகிந்தவே அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ஆளும் கட்சியின் பிரதம வேட்பாளர் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, தமது ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதிலேயே பெரும் இழுபறி நிலையில் இருக்கின்றன. ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வெற்றி என்ற சொல்லுக்கும் எட்டாம் பொருத்தம் என்பதே பலரின் கருத்தாக இருக்கின்றது. அத்துடன் 2002ல் புலிகளுடன் தேவையற்ற ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்து ‘பாம்புக்கு பால் வார்த்த’ கைங்கரியத்தை அவர் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு சிங்கள மக்களிடையே பரவலாக உண்டு. அதேவேளையில் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்து அவ்வியக்கத்தை உடைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவே சூத்திரதாரியாக இருந்தார் என்ற கோபம் மறுபக்கத்தில் புலி ஆதரவாளர்களிடம் மாறாத வடுவாக இருக்கின்றது. ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் இருக்கும் ஆதரவையும் இழக்க நேரிடும் என்பதால், வேறு ஆட்கள் பற்றியும் ஐக்கிய தேசியக்கட்சியில் ஒரு சாரார் சிந்தித்து வருகின்றனர். அதில் ஒருவராக எஸ்.பி.திஸாநாயக்கவின் பெயர் முன்னர் பிரஸ்தாபிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த மத்திய மாகாணசபைத் தேர்தலில் அவரது செல்வாக்கு எவ்வளவு என்பது நிரூபிக்கப்பட்டடுவிட்டதால் அந்த யோசனை கைவிடப்பட்டுவிட்டது. பின்னர் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் பெயர் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஐக்கிய தேசியக்கட்சி மட்டத்திலோ, நாட்டு மக்கள் மத்தியிலோ எவ்வித வெகுஜன ஆதரவுத்தளமும் இன்மையால் அதுவும் கைவிடப்பட்டுவிட்டது. இப்பொழுது அரசுடன் முரண்பட்டு நிற்பதாக கூறப்படும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் பிரஸ்தாபிக்கப்படுகிறது. இது உண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியை மேலும் படுபாதாளத்தில் தள்ளவே உதவும். சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக்கட்சி நியமிப்பதன் மூலம் முதலில் அக்கட்சியின் பிம்பம் மக்களிடையே அடிபட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஏனெனில் சொந்தமாக தனது ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க லாயக்கில்லாத கட்சி என்ற ஒரு கருத்து நாட்டு மக்களிடையே அதன்மூலம் வேரூன்றும். அத்துடன் இலங்கையில் நிலவும் மரபின்படி ஜனாதிபதியாக வருபவரே கட்சியின் தலைவராகாகவும் வருவது வழமை. அதன்படி சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவாகி, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராகவும் வந்தால், அதன்காரணமாக அக்கட்சியில் நீண்டகாலமாக கட்டிக்காக்கப்பட்டுவரும் ஜெயவர்த்தன குடும்ப வாரிசு அரசியல் தலைமைத்துவம் பறிபோய்விடும். அந்த வாரிசுத் தலைமைத்துவத்தைப் பாதுகாக்கவே கட்சிக்குள் பல்வேறு தடவைகள், பல வடிவங்களில் எதிர்ப்புகள் வந்தபோதும், அதனால் தேர்தல்களில் தோல்விகள் வந்தபோதும் ரணில் தலைமைப் பதவியை விட்டுக்கொடுக்காமல் அளுங்குப்பிடியாக இருந்து வருகிறார். அடுத்ததாக, புலிகளுக்கு எதிரான போரின்போது, இலங்கை மக்கள் இராணுவத்துக்கு வழங்கிய ஆதரவு தனிப்பட்ட சரத் பொன்சேகாவுக்கானது அல்ல. அது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக, அதற்காக அர்ப்பணிப்புடன் போரிட்ட முழு இராணுவ வீரர்களுக்கும், அதற்கு சரியான அரசியல் வழிகாட்டலைக் கொடுத்த அரச தலைமைத்துவத்துக்கும் இலங்கை மக்கள் வழங்கிய ஆதரவாகும். அந்த ஆதரவை தனக்கான தனிப்பட்ட ஆதரவு என நம்பி சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் இறங்கினால், அவர் பெரும் தோல்வியைச் சந்திப்பது நிச்சயம். அதுவுமல்லாமல் இப்படியான சந்தர்ப்பங்களின்போது பொதுவாக மக்கள் இராணுவத் தலைமைத்துவங்களை நாட்டினதோ அரசியல் கட்சிகளினதோ தலைமைத்துவங்களாக ஏற்றுக் கொள்வதில்லை என்பது பல நாடுகளின் வரலாற்று அனுபவங்களாகவும் இருக்கின்றன. இவையெல்லாவற்றுக்கும் அப்பால் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக்கட்சி, பொதுவேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தினால், சிறுபான்னைத் தேசிய இனத்தவர்களான தமிழ் - முஸ்லீம் - மலையக மக்கள் அவரை ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை. ஏனெனில் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக அவர் பல தடவைகள் மோசமான இனவாதக் கருத்துக்களை கக்கி வந்துள்ளார். இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே உரிய நாடு என ஒருமுறை தெரிவித்தார். இன்னொருமுறை கருத்துத் தெரிவிக்கும் போது, வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு என விசேடமான தீர்வு எதனையும் வழங்கக்கூடாது என வாதிட்டார். அத்துடன் புலிகளுக்கு எதிரான போரின் போது, போருடன் சம்பந்தப்படாத சாதாரண தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் சரத் பொன்சேகாவுக்கு கணிசமான பங்கு உண்டு என்பது தமிழ்ப் பொதுமக்களின் பொதுவான அபிப்பிராயமுமாகும். இப்படியான ஒரு சூழலில் நாட்டின் சனத்தொகையில் 30 வீதத்தைக் கொண்டிருக்கும் சிறுபான்மை இனச் சமூகங்களின் ஆதரவைப் பெறமுடியாத சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் முட்டாள்தனமான முடிவை ஐக்கிய தேசியக்கட்சி எடுக்காது என்பதே விடயமறிந்த அரசியல் நோக்கர்களின் அபிப்பிராயமாக இருக்கினறது. அப்படியானால் ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்வி எழும்பலாம். இந்தக் கேள்வி எழும்புவதிலிருந்தே ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதற்குத் தகுதியானவர் இல்லை என்ற கருத்தும் அதில் தொக்கி நிற்பதை அவதானிக்க முடியும். அதேவேளையில் ரணிலை தவிர வேறு எவரும் அக்கட்சியில் வேட்பாளராகும் தகுதியில் இல்லாதிருப்பதும், அக்கட்சியின் பெரும் பலவீனங்களில் ஒன்றாக இருக்கின்றது. எனவே ரணிலே வழமை போல ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதும், வழமைபோலவே அவர் தோல்வியடைவதும் தான் நடைபெறப்போகும் யதார்த்தமாகும். இதேவேளையில் நடைபெறப்போகும் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் சம்பந்தமாக, வழமையை விட தமிழ்மக்கள் அதிக கரிசனை காட்டவேண்டிய ஒரு சூழல் எழுந்திருப்பதையும் கருத்தில் கொள்வது அவசியமானது. அதில் முதலாவது விடயம், இதுவரைகாலமும் பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை புலிகள் குழப்பி வந்துள்ள ஒரு சூழ்நிலையில், இப்பொழுது புலிகள் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டுள்ளதால், அதற்கான வாய்ப்பு தமிழ் தலைமைத்துவங்களுக்கு கிடைத்துள்ளதைச் சுட்டிக்காட்டலாம். அந்த வாய்ப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகளும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் முன்னோடியாக, இப்பொழுதே தமிழ் கட்சிகள், அரசுடன் இணைந்துள்ள இடதுசாரி கட்சிகளுடனும், அரசிலுள்ள ஏனைய ஜனநாயகத்தையும் நீதியையும் விரும்பும் சக்திகளுடனும் நட்புறவுத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இரண்டாவது விடயம், நடந்து முடிந்த தென்மாகாணசபைத் தேர்தலில், அரசுக்கு ஏறத்தாள மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இது சிங்கள மக்கள் மத்தியில் இன்றைய அரசாங்கத்துக்கு உள்ள அபரிமிதமான ஆதரவுத் தளத்தை கோடிகாட்டி நிற்கிறது. இந்த வாய்ப்பையும் தமிழ்மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரப்போகின்ற தேர்தல்களில் தமிழ் - முஸ்லீம் - மலையக மக்கள் தற்போதைய அரசை ஆதரித்து வாக்களிப்பதன் மூலம் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதை நிச்சயப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், இன்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிங்கள பேரினவாத சக்திகளின் எதிர்ப்பால், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாமல் திண்டாடும் மகிந்த ராஜபக்ச அரசு, சுலபமாக தற்போதைய அரசியல் சாசனத்தை மாற்றி அமைத்து இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணமுடிவதுடன், ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமாக உள்ள இன்றைய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையையும் ஒழித்துக்கட்ட முடியும். அதன் மூலம் 1977ல் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்ததின் மூலம், கடந்த 32 வருடங்களாக நாட்டில் நிலவிவந்த, ஜனநாயக விரோதச் சூழலுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் காணமுடியும். தமிழ்பேசும் மக்கள் கடந்த 60 வருடங்களாக பின்பற்றி வந்த (அவர்களது தலைமைத்துவங்களால் பின்பற்ற வைக்கப்பட்ட) தவறான, அழிவுகரமான கொள்கைகளிலிருந்து விடுபட்டு, ஒரு சரியான பாதையில் பயணிக்கவும், அதன் மூலம் தமது உரிமைகளை வென்றெடுக்கவும் ஒரு அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்துவார்களா அல்லது வழமைபோல (அவர்களது தலைமைகள்) தமது வர்க்க சகாக்களான ஐக்கிய தேசியக்கட்சியினர்க்கு சேவகம் செய்யப்போய் கிடைத்த வாய்ப்பை போட்டு உடைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
|